பக்கம் எண் :

116பழந்தமிழாட்சி

முடிந்தபின், அப்புதுக் கல்வெட்டுகளை அதிகாரிகள் காட்டு மிடத்தில் பதிப்பது வழக்கம். கல்வெட்டுப் படியெடுப்பு கற்படி மாற்று எனப்பட்டது. சிதைந்துபோன கல்வெட்டுகளைப் புதுப் பிக்கும்போதும் இம்முறையே கையாளப் பெறும்.

     (6) அறத்துறை: பார்ப்பனரை யுண்பிக்கும் அக்கிரசாலையும், அடியாரை யுண்பிக்கும் மடமும், இரப்போரை யுண்பிக்கும் அடிசிற் சாலையும் ஆகிய மூன்றனுள் ஒன்றோ பலவோ, பல வூர்களிற் கோயிலோடிணைக்கப்பட்டிருந்தன. பெரும்பற்றப்புலியூரில் இருந்த அறச்சாலை அறப்பெருஞ் செல்வி என்றும், திருமுக் கூடலில் சாத்திரர் என்னும் பார்ப்பன வடமொழி மாணவர்க்கு மருத்தகமாகவும் மருத்துவக் கல்லூரியாகவு மிருந்த ஆயுர்வேத மருத்துவசாலை (ஆதுலசாலை) வீரசோழன் என்றும் பெயர் பெற்றிருந்தன.

     (7) அரசியற் றுறை: அரசிறையிறுக்காத நிலங்களும் ஊர்களும் கோயிற்கு விற்கப்பட்டு, அவ்விலைத் தொகையினின்று அவற்றிற்குரிய அரசிறையிறுக்கப்பட்டது,

     ஊர் மண்டபமில்லாத வூர்களிலெல்லாம், அரசியற் கூட்டங் கள் கோயில் மண்டபத்திலேயே கூட்டப்பட்டன. 

     சில அரசர் கோயிற்பணியொடு திருநூற்பணியும் செய்து வந்தனர். முதலாம் இராசராசன் திருமுறை கண்டதும், மூன்றாம் குலோத்துங்கன் பெரிய புராணம் இயற்றுவித்ததும் நூற்பணியாம்.

     கோயிற் கணக்குகள் ஆண்டுதோறும் நாட்டதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.