பின்னிணைப்பு 1. மக்கள் நிலைமை தமிழரசர் காலத்தில், தமிழ் மக்கள், திணைநிலை திணை மயக்கநிலை ஆகிய இருநிலைப்பட்டு வாழ்ந்து வந்தனர். குறிஞ்சியில் குறவரும் முல்லையில் இடையரும் மருதத்தில் உழவரும் நெய்தலில் செம்படவரும் பாலையில் கள்ளர் மறவர் முதலியோருமாக ஒவ்வொரு திணைக் குலமும் தனித்தனி வாழ்வது திணைநிலை; சிற்றூரிலும் பேருரிலும் நகரிலும் மாநகரிலும் பல திணைக்குலம் கலந்து வாழ்வது திணை மயக்க நிலை. முதலாவது மருதநிலத்திலும் பின்னர்ப் பிற நிலத்தூர்களிலும் திணைமயக்க நிலையாலும் தொழிற்பிரிவினாலும் பல குலங்கள் ஏற்பட்டிருந்தன. ஆசிரியரும் பூசாரியாரும் துறவியரும் அந்தணர் என்றும் ஆட்சிவினை பூண்டோர் அரசர் என்றும், விற்பனையும் இருவகை வாணிகமும் மேற்கொண்டோர் வணிகர் என்றும், உழுதும் உழுவித்தும் உண்போர் வேளாளர் என்றும், கைத்தொழில் செய்பவர் வினைவலர் என்றும், குற்றேவல் செய்பவர் ஏவலர் என்றும், இரந்துண்போர் இரப்போர் என்றும் மருதநில மக்கள் எழுபெரு வகுப்பினராக வகுக்கப்பட்டு நால்வகை நிலத்தும் நாடு முழுதும் பரவினர். முற்கூறியவாறு பெருநகரங்களில் வந்து தங்கிய அயல் நாட்டார், நாடுபற்றிய குலத்தினராய் வாழ்ந்து வந்தனர். மக்களெல்லாரும் பெரும்பாலும் முன்னோர் தொழிலையே செய்து வந்தாலும், அவருக்கு விரும்பிய தொழிலை மேற்கொள்ள உரிமையிருந்தது. பிறப்புப்பற்றிய குலப்பிரிவும், அப்பிரிவுபற்றிய ஏற்றத்தாழ்வும், தீண்டாமையும் முற்காலத்திலில்லை. தொழில் பற்றிய குலப்பிரிவும், அறிவும் துப்புரவும் ஒழுக்கமும்பற்றிய ஏற்றத் தாழ்வுமே இருந்துவந்தன. கல்வி எல்லாருக்கும் பொதுவாயிருந்தது. பாணர் இசை நாடகத் தொழிலையும், வள்ளுவர் கணியத் தொழி லையும் மழிவினைஞர் செல்லியத் தொழிலையும் (Surgery), எங்கும் நடத்தி வந்தனர். கரும்பு தின்னக் கைக்கூலி கொடுக்கவும், குழைகொண்டு கோழி யெறியவும் விளைவுஞ் செல்வமும் விஞ்சியிருந்தன. |