ஏழ்குணகாரைநாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்; குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும், நதியும், பதியும். தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்," என்னும் அடியார்க்குநல்லார் கூற்றால்;2 அமிழ்ந்துபோன பாண்டி நாட்டுப்பகுதி ஐம்பத்தொன் றிற்குக் குறையாத நாடுகளைக் கொண்டிருந்ததென்பதும், அவற்றுள் தென்கோடியிலிருந்த தென்பாலிமுகம் பஃறுளியாற் றிற்குத் தெற்கிலிருந்த தென்பதும் அறியப்படும். "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி." 3 என்று இளங்கோவடிகள் கூறியிருப்பதால், பஃறுளியாறு கங்கை போலும் பேரியாறு என்றும், குமரிக்கோடு பனிமலைக் கடுத்த பெருமலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், குமரி யாற்றிற்குத் தெற்குப்பட்ட பாண்டிநாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கியபின் தமிழகப் பேரியாறாயிருந்தது குமரி யாறே. "தெனாஅ துருகெழு குமரி" (புறம். 6) என்று காரிகிழாரும், "குமரியம் பெருந்துறை" (புறம். 67) என்று பிசிராந்தையாரும் பாடியிருத்தல் காண்க. கடைச்சங்க காலத் திற்குப்பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியுங் குமரியும் மூழ்கிய பின்னரே, "தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே" என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்திற் சிறந்து, சோழநாடு புனல் நாடு எனப்பட்டது. கடைச்சங்க காலத்திலேயே, சேரநாடும் சோழநாடும் இவ்விரு பாகங்களாகப் பிரிந்திருந்தன. சேரநாட்டில், குட(மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்கிலுள்ளது கடன்மலைநாடு என்றும், கிழக்கிலுள்ளது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றிருந்தன. 2 சிலப்பதிகாரம் (சாமிநாதையர் பதிப்பு). பக்கம் 230 3 சிலப்பதிகாரம்(சாமிநாதையர் பதிப்பு) 11 :19-22. |