பக்கம் எண் :

48பழந்தமிழாட்சி

     "செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்" (கும்பகருணன் வதைப்படலம். 159)
 

என்று கம்பரும்,

"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
 உவரா வீகைத் துவரை யாண்டு"
                (புறம். 201)

என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவார சமுத்திரம் என்னும் துவரை நகரிலும்2 இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது.

     மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால், ஏவறை களும் பொறிகளுமுடைய இஞ்சியே சோவரணா யிருந்திருத்தல் வேண்டும்.

"சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த" (சிலப்.)

என்று ஆய்ச்சியர் குரவையும்,

"சுழலழலுள் வைகின்று சோ"                (பு.வெ. 228)                   

என்று புறப்பொருள் வெண்பாமாலையும், கூறுவதால், இராவணன் நகரிலும் வாணாசுரன் நகரிலும் சோவரண் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரை மதிலரண் பல பொறிகளைக் கொண்டிருந் ததாக இளங்கோவடிகள் கூறுவதால், அதனை ஒருவகைச் சோவரண் என்னலாம்.

     மதுரைப் புறமதிலிலிருந்த பொறிகளுங் கருவிகளும் உறுப்புக் களுமாவன:

(1) வளைவிற்பொறி-வளைந்து தானே எய்யும் எந்திர வில்.
(2) கருவிரலூகம்-கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.
(3) கல்லுமிழ் கவண்-கல்லையெறியும் இருப்புக் கவண் (இடங்கணி). 
(4) பரிவுறு வெந்நெய் - காய்ந்நிறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய்.
(5) பாகடு குழிசி - செம்புருக்கும் மிடா.
(6) காய்பொன்னுலை - உருகக் காய்ச்சியெறியும் எஃகு உலை,



2 செப்புப்புரிசையிருந்த நகர் துவரையெனப் பெயர்பெற்றது கவனிக்கத் தக்கது. துவர்-சிவப்பு துவரை யென்னும் பயற்றின் பெயரும் இக்காரணம் பற்றியதே. துவர்-துவரை.