என்று கபிலர் பாடியிருப்பதால், கொங்குநாடு பொன்னுக்கும் மணிக்கும் சிறந்திருந்தமை அறியப்படும். கொங்குநாட்டிற் பிறந்து நெடுந்தொலைவு அதன்வழியே செல்லும் காவிரியாறு பொன்னி யெனப்பட்டதும், தமிழ்நாட்டுப் பொன் கொங்குப்பொன் எனச் சுட்டப்பெற்றதும் கவனிக்கத்தக்கன. கொங்குநாடு முற்காலத்திற் சேரனுக்கும் பிற்காலத்திற் சோழனுக்கும் உரியதாயிருந்தது. சோழநாட்டின் வடவெல்லைப் புறத்திலுள்ள கிருட்டிணை யாற்றங் கரையிலும் அதன் கிளையான துங்கபத்திரைக் கரையிலும் வயிரச் சுரங்கங்கள் இருந்தன. உலக ஒளிமலையான கோகினூர் வயிரம் கிருட்டிணை யாற்றங்கரையில் எடுக்கப்பெற்றதே. பாண்டிநாட்டில் வச்சிரநாடு எனப் பெயர்பெற்ற ஒரு கடற்கரை நாடு இருந்ததாகக் களவியற்காரிகை என்னும் நூல் கூறுகின்றது. இறைவகை: அரசியல் வருவாய்களுள் நிலையானதும் முதன்மையானதும் குடிகள் செலுத்தும் வரியே. அது, நிலவரி, நீர்வரி, மனைவரி, தொழில்வரி, ஆள்வரி (poll tax), விலங்குவரி, பொருள்வரி, உய்ப்புவரி, மணவரி, தண்டவரி, கோயில்வரி, கொடைவரி, ஊழியப்பேற்றுவரி, படைவரி, காட்சிவரி, கருவூலவரி, காசடிப்புவரி எனப் பலதிறத்தது. நீர்வரி, விளைநிலங்கட்கு நீர்நிலைகளினின்று நீரைப் பாய்ச்சிக் கொள்வதற்குச் செலுத்தும் வரி, அது ஏரிகுளப் பாய்ச்ச லுக்குரியதாயின் நிலைநீர்ப்பாட்டம் என்றும், ஆற்றுப் பாய்ச்சற் குரியதாயின் ஒழுகு நீர்ப்பாட்டம் என்றும் பெயர் பெறும். இனி, நன்னீர் புன்னீர் எனவும் வேறுபாடுண்டு. தொழில்வரி, உழவொழிந்த பிற தொழில்கட்கு வாங்கப்படுவது, விலங்குவரி, ஆடு பெற்றம் (பசு) எருது எருமை முதலிய விலங்குகட்கு வாங்கப்படுவது. உய்ப்பு வரி, நிலத்திலும் நீரிலும் பொருள்களை உய்த்தற்குச் செலுத்துவது. அது ஆயம் உல்கு சுங்கம் என்னும் பெயர்களாற் குறிக்கப்பெறும். மண வரி, திருமணத்திற்கு விதிக்கப்படுவது. அது அரைக்கால் பணமாகும். தண்டவரி, குற்றவாளிகட்குத் தண்டமாக விதிக்கப்படுவது. கொடைவரி, அரசன் அந்தணர்க்குச் செய்யும் பெருங்கொடை கட்குத் தண்டப்படுவது. ஊழியப்பேற்றுவரி, ஊரவையார் பாடி காவலன் முதலியவரின் சம்பளத்திற்காகத் தண்டப்படுவது. பாடிகாவலன் சம்பளத்தை அவனே தண்டிக் கொள்ள உத்தரவிருந் தது. அவன் சம்பளம், நன்செய் விளைவில் மாவிற்கு ஒரு கலமும், புன்செய் விளைவில் மாவிற்கு ஒரு பணமும், கமுகிற்கு மரம் ஒன்றுக்கு வீசம்பணமும், கரும்பு மருக்கொழுந்து இஞ்சி எள் |