பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்135

   எழுத்தாணி கொண்டு ஏட்டில் கீறியெழுதுவதற்கு வளை கோட்டெழுத்தும், உளிகொண்டு பட்டயத்தில் குழித்தெழுது வதற்கு நேர்கோட்டெழுத்துமே, ஏற்றதாதல் காண்க.

   இந்திய ஆரியர்க்கு முதலில் எழுத்தில்லை. அவர் மறை எழுதாக்கிளவி யெனப்பட்டது. வேதக்காலப் பிராமணர் தமிழ்நாடு வந்தபின், வடமொழியில் நூலெழுதத் தமிழெழுத்தையொட்டிக் கிரந்த வெழுத்தை அமைத்துக்கொண்டனர். அதன் பின், கி.பி. 10-ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டில் தேவநாகரி தோன்றிற்று.

   "அறியப்பட்ட சமற்கிருத முதற் பழங்கல்வெட்டு, கத்திய வாரில் சுனாகர் என்னுமிடத்தில் ஒரு பாறைமேல் உளது. அது உருத்திரதாமன் கல்வெட்டென வழங்கிவருகின்றது. அதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு. அது நாகரியில் இல்லை; பழைய கல்வெட்டெழுத்தில் உளது. ஏறத்தாழக் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குரிய பவர் கையெழுத்துப் படிகள், நாகரியை நோக்கிய மிகுந்த முன்னேற்றத் தைக் காட்டுகின்றன; அதே சமயத்தில் தந்திதுருக்கனின் கி.பி.750ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இன்று வழக்கிலுள்ள நாகரியைப் பெரிதும் ஒத்த குறிகளின் முழுத் தொகுதியையும் கொண்டுள்ளது. எனினும், உண்மையான இற்றை நாகரியிலுள்ள முதற் கல்வெட்டு, கி.பி.11ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதன் றென்பது கவனிக்கத்தக்கது." (மானியர் உல்லியம்சு சமற்கிருத- ஆங்கில அகரமுதலி - முன்னுரை, ப..XXVIII, அடிக் குறிப்பு).

   தேவநாகரியும் தமிழெழுத்தைப் பின்பற்றியதே என்பது, கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.

   பொருளிலக்கணம் தமிழிலன்றி வேறெம் மொழியிலு மில்லை.

   தமிழர் இன்னிசைக் கலையிலும் நாடகக்கலையிலும் சிறந்திருந்ததினால், மொழியொடு அவ் விரு கலைகளையும் சேர்த்து, தமிழை இயலிசை நாடகமென முத்தமிழாய் வழங்கினர். இத்தகைய மொழியமைப்பிடம் வேறெங்கணுமில்லை.

   தமிழர் இயலுமிடமெல்லாம் தம் வினைகளை இசையொடு செய்து வந்தனர் என்பது, தாலாட்டுப் பாட்டு, ஏர்மங்கலப் பாட்டு, நடவைப்பாட்டு, முகவைப்பாட்டு, ஏற்றப் பாட்டு, ஏலப் பாட்டு. வள்ளைப்பாட்டு, கழியற் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டப் பாட்டு. ஊஞ்சற் பாட்டு, வழிநடைச் சிந்து, ஒப்பு (ஒப்பாரி)ப் பாட்டு முதலியவற்றால் அறியப்படும்.

   முதலிரு கழகங்களிலும் இருந்த இலக்கணமெல்லாம் முத் தமிழிலக்கணங்களே. இயற்றமிழ் இலக்கணம் பிண்டம் என்றும், முத்தமிழிலக்கணம் மாபிண்டம் என்றும் கூறப்பெறும்.