பக்கம் எண் :

136பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   பிண்டித்தல் = பிடித்தல், திரட்டுதல் பிண்டி - பிண்டம் = திரளை. பிண்டி - பிடி. ஒ.நோ: தண்டி - தடி. பிடித்தல் = திரட்டுதல், கைக்குள் திரளக் கொள்ளுதல். பொரிவிளங்காய் பிடித்தல் என்னும் வழக்கையும், "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" என்னும் பழமொழியையும், நோக்குக.

   பொருளிலக்கணம் பொருள்களை அகம்புறம் என இரண் டாக வகுத்து, கணவன் மனைவியர் காதலின்பத்தை அகம் எனச் சிறப்பித்து, மற்றெல்லாவற்றையும் புறத்துள் அடக்கும். புறத்துள் போர்த்துறை மிகச் சிறப்பாகக் கொள்ளப்பட்டு, மற்றவையெல்லாம் எழு புறப்பொருள் திணைகளுள் ஆறாவதான வாகைத் திணையுள் அடக்கப்பெறும். இவற்றின் விரிவை என் தொல்காப்பிய விளக்கம் என்னும் நூலுட் கண்டு கொள்க. உலக மொழிகளுள் தமிழ் மிகுந்த இலக்கண வரம்புள்ளது.

"கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ"

என்று பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற் புராணம்) கூறுதல் காண்க.

(2) மொழிநூல்

   மொழிநூற்கு வித்தூன்றியவர் தமிழரே. தமிழ்ச்சொற்களை, இலக்கணவகைச் சொல் மூன்றும் பொருள்வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல்வகைச் சொல் மூன்றுமாக வகுத்திருந்தனர்.

"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே." (தொல்.பெயர்.1)
"சொல்லெனப் படுப பெயரே வினைஎன்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே."
(தொல்.பெயர். 4)
"இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப."
(தொல்.பெயர். 5)

   இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என மூன்றியலும் செய்யுள் ஈட்டச்சொல்லே.

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி."
(தொல்.எச்ச.4)

"அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வழிய என்மனார் புலவர்."
(தொல்.எச்ச. 7)