இந் நூற்பாக்களும், முதனிலை, இடைநிலை, ஈறு, உருபு, புணர்ச்சி, சாரியை முதலிய சொல்லுறுப்புகளும், பண்டைத் தமிழரின் மொழி நூலறிவைக் காட்டும். இயற்சொல் என்பது வேர்ச்சொல்லும் அடிச்சொல்லுமான இயல்பான சொல் ( Primitive mood). திரிந்த சொல் என்பது அதினின்று திரிந்த சொல் (Derivative mood). இவை யிரண்டும் செந்தமிழ்ச் சொல். திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல். அக்காலத்தில் வட சொல்லும் பிற அயற்சொல்லும் தமிழிற் கலக்கவில்லை. (2) அறநூல் இது பொருள்களை அறம் பொருள் இன்பம் வீடு என நான்காகப் பகுத்து, நல்லொழுக்கத்தைப்பற்றிக் கூறும். (3) பொருள்நூல் இது எல்லாரும் தத்தம் தொழிலாற் பொருளீட்டுவதற்கு, இன்றியமையாத பாதுகாப்புச் செய்யும் அரசியலைப்பற்றிக் கூறும். (4) இன்பநூல் இது ஆடவர் பெண்டிர் காமவின்பத்தைச் சிறப்பித்துக் கூறும். இன்ப வாழ்க்கையைக் கூறுவது அகப்பொருள் நூல் என்றும், இன்பத் துய்ப்பை மட்டும் கூறுவது காமநூல் அல்லது வேணூல் என்றும், பெயர் பெறும். (5) மறைநூல் (Theology) இது பெரும்பாலும் சமயக் குடுமிகளை அல்லது கொண் முடிபுகளைக் கூறும். இது மந்திரம் எனவும் வாய்மொழி எனவும் படும். மன்னும் திரம் (திறம்) மந்திரம். மன்னுதல் = கருதுதல், எண்ணுதல். இது உண்மையாகும் என்று திண்மையாய் எண்ணிச் சொல்வது மந்திரம். "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே" (தொல்.செய்.78) "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப." (தொல்.செய்.176) முன்னுதல் கருதுதல். முன்னம் = மனம். முன் - மன் - மனம். இனி, முன்னம்- முனம் - மனம் என்றுமாம். மந்திரம் சமயக் கொள்கைப் பற்றியதும் சாவிப்பு வாழ்த்துப் பற்றியதும் என இரு வகைப்படும். சமயக் கொள்கை பற்றியதும், கடவுள் வாழ்த்து, கொண் முடிபு நூல் என இரு திறப்படும். நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் |