பக்கம் எண் :

138பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

மொழி கடவுள் வழுத்து; திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் கொண்முடிபு (சித்தாந்த )நூல்.

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"
(குறள். 28)

என்றது இத்தகைய நூல்களை நோக்கியே.

   சாவிப்பு வாழ்த்து மொழிகளை மந்திரம் என்பது உலக வழக்கு; நூல் வழக்கன்று.

6. பட்டாங்கு நூல் (Philosophy)

   பட்டாங்கு உண்மை. பட்டாங்கு நூல் மெய்ப்பொருள் நூல். மாந்தன் உடலமைப்புப்பற்றித் தமிழர் கண்ட மெய்ப்பொருள்கள் (தத்துவங்கள்) 96. அவை ஆதன் (ஆன்ம) மெய்ப்பொருள் 24, நாடி10, நிலை (அவத்தை) 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, பிணி 3. திரிபு (விகாரம்) 8, நிலைக்களம் (ஆதாரம்) 6, தாது 7, ஊதை (வாயு) 10. உறை (கோசம்) 5, வாயில் 9 என்பன.

   ஆதன் மெய்ப்பொருள் 24 ஆவன: பூதம் 5, புலன் 5, அறிவுப் புலன் 5, கருமப்புலன் 5, கரணம் 4.

   எல்லாப் பொருள்களும் ஐம்பூதமாய் அடங்கும் என்பதும்; ஆண்டவன் (பதி), ஆதன் (பசு), ஆசு(பாசம்) என மூன்றாய் அடங்கும் என்பதும்; உயிர், மெய் (உடம்பு) என இரண்டாய் அடங்கும் என்பதும்; தமிழரின் வேறுபட்ட கொள்கைகளாம்.

   ஆதனுக்கு இறைவனோடுள்ள தொடர்புமுறை இருமை (துவைதம்), ஒன்றிய இருமை (விசிஷ்டாத்து வைதம்) என இருவகை யாகவே, பண்டைத் தமிழராற் கொள்ளப்பட்டன. ஒருமை (அத்துவைதம்) தமிழர் கொள்கையன்று.

   தமிழிலக்கண முதனூல் முனிவனால் இயற்றப்பெற்றதினால், உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், புணர்ச்சி முதலிய எழுத்திலக்கணக் குறியீடுகளும்; பெயர், வினை முதல், எண், வேற்றுமை, வினை, வினைமுற்று, வினை யெச்சம், இறந்தகால வினை, நிகழ்கால வினை, எதிர்கால வினை முதலிய சொல்லிலக்கணக் குறியீடுகளும்; மெய்ப்பொருள் நூற்கருத்தும் தழுவுமாறு அமைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் விளக்கத்தை என் செந்தமிழ்ச் சிறப்பு. முத்தமிழ் என்னும் நூல்களிற் காண்க.

(7) அளவை நூல்

   இது பொருள்களின் உண்மையை அறிதற்கு ஏதான (ஏதுவான) அளவைகளை (பிரமாணங்களை) எடுத்துக் கூறுவது.