பக்கம் எண் :

152பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

என்றும் அங்குற்றை என்றும் படர்க்கைச் சொல்லாற் குறித்தும், பணிவுடைமை காட்டிவந்தனர். பொதுவாக, இழிந்தோனை நீ என்றும், ஒத்தோனை நீர் என்றும். மூத்தோனை நீங்கள் என்றும், உயர்ந்தோனைத் தாங்கள் என்றும் துறவுமடத் தலைவனை அங்குற்றை என்றும், அரசனையும் முனிவனையும் அடிகள் என்றும் சொல்லாற் சுட்டுவது தமிழ் மரபாகும்.

   தென்புலத்தார் (இறந்த முன்னோர்) நாளன்று இரப்போர்க் கும் ஏழை யெளியவர்க்கும் ஆண்டியர்க்கும் விருந்தளித்தும், இறந்துபோன சூலியின் பொருட்டுச் சுமைதாங்கிக் கல்நட்டும், வேனிற் காலத்தில் வழிப்போக்கர்க்குத் தண்ணீர்ப் பந்தலும் மோர்ப் பந்தலும் வைத்தும், ஆவிற்கு உரிஞ்சுதறி நட்டியும், விலங்குகட்குத் தண்ணீர்த் தொட்டி கட்டியும், பலவாறு அறஞ்செய்து வந்தனர்.

"அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்"
(சிலப்.16:71-3)

இல்லறத்தாரல் இயன்றவரை கடைப்பிடிக்கப்பட்டன. முதற்கால அந்தணர் தமிழ் முனிவர்.

   வீடு கட்டும்போது, அயலாரும் ஆண்டியரும் படுத்துறங்கத் தெருத் திண்ணை அமைக்கப்பெற்றது. மாடங்களின் உச்சியில் காட்டுப் புறாக்கள் தங்கற்குப் புரைகள் விடப்பட்டன. சாரங்கள் இட்ட துளைகளும் குருவிகள் கூடுகட்ட விடப்பட்டன. கோயில் மண்டபங்களின் முகடுகள் வௌவால்கள் தங்குமாறு அரையிருட் டறைகளாய் அமைக்கப்பட்டன. அவை வௌவால் நத்தி எனப் பெயர் பெற்றன. அயல்நாட்டாரும் வழிப்போக்கரும் தங்குவதற்கு ஊரார் ஊர்மடங்கள் கட்டி வைத்தனர்.

"உடைகோ வணமுண் டுறங்கப் புறந்திண்ணை யுண்டு"
"சகமுழுதும், படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு"

என்று பட்டினத்தடிகள் பாடியிருத்தல் காண்க.

"கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவல்
இன்றுயில் இரியும் பொன்துஞ்சு வியனகர்"

(பெரும்பாண். 437-40)

என்பது, மாடப்புறாவைக் குறித்தல் காண்க.

   கூரைவீடுகளின் இறப்பிலும் சிட்டுக் குருவிகள் தங்கும். இதனால், "பிறப்பிறப்பிலே," என்று சிட்டுக்குருவிக்கும் சிவபெரு மானுக்கும் இரட்டுறலாகச் சொன்னார் காளமேகனார். மக்களை நம்பி அடைக்கலம் புகுவதனாலேயே, வீட்டுக் குருவிக்கு அடைக் கலான் என்று பெயர் வந்தது.