| 2 பண்டைத் தமிழ்ப் பண்பாடு 1. பொது மேலை நாடுகளெல்லாம் நாகரிகமடைந்திருந்தாலும், அவற்றுள் ஆங்கில நாடே பண்பாட்டிற் சிறந்ததாகச் சொல்லப் படுவதுபோல், நாவலந்தேயத்திலும் தமிழ்நாடே நல்லதாகச் சொல்லப்பட்டது. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து" என்று, தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூறுதல் காண்க. "வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய்எருமை என்றிவை யாறும் குறுகார் அறிவுடையார்" என்பது ஒரு பழஞ் செய்யுள் (தொல். சொல் 55. சேனா. உரை மேற்கோள்). "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல" (புறம். 31) என்பதால், தமிழர் அறத்தையே எல்லாப் பேறுகட்கும் அடிப்படை யாகக் கொண்டிருந்தனர் என்பது புலனாகும். மொழித்துறையில், அவர் நாகரிகம் அடைந்திருந்தது போன்று பண்பாடும் அடைந்திருந்தனர். ஒன்றிற்கு இரண்டிற்குப் போதல் என்றும் கால் கழுவுதல் என்றும் இடக்கரடக்கியும், இறந்தவனைத் துஞ்சினான் என்றும் சாவைப் பெரும்பிறிது என்றும் நல்ல பாம்பு கடித்தலைக் கொடித் தட்டல் என்றும் மங்கல வழக்காகவும் கூறிவந்தனர். பெரியோரைக் கைநீட்டிச் சுட்டாமலும், அவரை நோக்கிக் கால் நீட்டாமலும், அவர் நிற்க இருந்துகொண்டு பேசாமலும், அவரை நீங்கள் என்று முன்னிலைப் பெயராற் குறியாது தாங்கள் |