பக்கம் எண் :

154பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

பிறப்பால் சிறப்பில்லை யென்பதும், மாந்தர் எல்லாரும் ஓரினம் என்பதும் பண்டைத் தமிழர் கொள்கைகளாம். தொழில் பற்றிய வகுப்பே தமிழர் குலப்பிரிவாகும்.

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
(குறள். 972)

"தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே."
(புறம்.189)

"நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்."
(நாலடி.195)

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (திருமந். 2104)

"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே."
(கபிலர் அகவல்)

   தமிழர் கடைப்பிடித்த தலையாய அறங்களுள் இரண்டு, வாய்மையும், நேர்மையுமாகும், "பொய் சொன்ன வாய்க்குப் புகாக் கிடையாது." என்பது பழமொழி. புகா = உணவு.

   மாவலி என்னும் மாபெருஞ் சேரவேந்தன், தனக்கு இறுதி நேர்வது தெரிந்த பின்னும் தன் வாய்ச்சொல் தப்பவில்லை.

   ஊரவைத் தேர்தலில் , இளைஞர் முதல் முதியோர் வரை எல்லாரும் கூடியுள்ள மண்டபத்தின் நடுவில் வைக்கப்பட்ட குடத்தை, அங்குள்ள நம்பிமாருள் முதிர்ந்தார் ஒருவர் எடுத்துக் கவிழ்த்து அதனுள் ஒன்றுமில்லையென்று காட்டிக் கீழே வைப்பர். ஒவ்வொரு குடும்பிலும் (ward) தகுதியுள்ளவர் பெயரையெல்லாம் தனித்தனி வரைந்த ஓலைகளை, குடும்பின் பெயர் பொறித்த வாயோலையுடன் சேர்த்துக்கட்டி, அக் குடத்துள் இடுவர். அதன் பின், முற்கூறிய முதுநம்பியார் அங்கு நடைபெறுவது இன்னதென் றறியாத சிறுவனைக் கொண்டு ஒரு கட்டை எடுப்பித்து, அதை அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச் சிறுவனை எடுக்கச் சொல்லி வாங்கி, அங்குள்ள