பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்155

கணக்கன் கையிற் கொடுப்பர். அவன் தன் ஐந்து விரலையும் அகல விரித்து அதைப் பெற்று, அதிலுள்ள பெயரை அங்குள்ளார் அனைவர்க்கும் கேட்குமாறு உரக்கப் படிப்பான். அதன்பின், அங்குள்ள நம்பிமார் எல்லாரும் ஒவ்வொருவராய் அதை அவ்வாறே படிப்பர். அதன் பின்னரே அப் பெயர் ஏட்டிற் பதியப் பெறும். இங்ஙனம் எல்லாக் குடும்பினின்றும் தெரிந்தெடுக்கப் பெற்றவரே ஊரவை யுறுப்பினராவர்.

   ஊரவைக் கணக்கன் நல்லொழுக்கமும் நல்வழியில் ஈட்டிய பொருளும் உடையவனாயிருத்தல் வேண்டும். அவன் அவை யார்க்குக் கணக்குக் காட்டும்போது, பழுக்கக் காய்ச்சிய இருப்பு மழுவைக் கையில் ஏந்திக்கொண்டு, தான் காட்டும் கணக்கு உண்மையான தென்று உறுதி கூறவேண்டும். அவன் கை சுடப்டாவிடின், அவன் ஆட்டை நன்னர்
(Annual Bonus) ஆகிய ஏழு கழஞ்சிற்குமேல் காற்பங்கு பொன் சேர்த்துக் கொடுக்கப்பெறும்; சுடப்படின், பத்துக் கழஞ்சு பொன் தண்டமும் வேறு தண்டனையும் அவன் அடைவான்.

   வழக்கு மன்றங்களில், வழக்காளிகள் தம் கூற்றுகளைப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பிடித்தல், நச்சுப் பாம்புக்குடத் திற்குள் கைவிடுதல் முதலிய தெய்வச்சான்று கொண்டு மெய்ப்பிக் கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது.

   சீவகசிந்தாமணி நூலாசிரியரான திருத்தக்கதேவர், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை ஏந்தி, தம் கற்பைப்பற்றிப் பிறர்க் கிருந்த ஐயத்தை அகற்றினார் என்னும் கதையும், இங்குக் கருதத்தக்கது. கற்புடை மகளிர் தம் கற்பை மெய்ப்பிக்க இம் முறையையே பெரும்பாலும் கையாண்டனர்.

   பழையனூர் வேளாளர் எழுபதின்மர், அவ்வூர் வணிகனுக்கு உறுதி கூறியதை நிறைவேற்றுமாறு தற்கொலை செய்துகொண்டது, இலக்கியப் புகழ்பெற்ற செய்தியாகும்.
தாளாண்மை, வேளாண்மை, தன்மானம், நன்றி மறவாமை என்பன தமிழரின் பிற பண்பாட்டுக் குணங்களாகும்.

"வினையே ஆடவர்க் குயிரே வாள்நுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர்’’
(குறுந்.135)
"வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை
தாழ்க்கும் மடிகோள் இலராய் வாழாதார்
வாழ்க்கை திருந்துத லின்று’’
(பழ.151)
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
(குறள்.110)்