பக்கம் எண் :

58பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

 வேற்றூர் சென்றுவிடும் உடன்போக்கும் உண்டு. அவர் திரும்பி வந்தபின், காதலன் வீட்டிலேனும் காதலி வீட்டிலேனும் வதுவை என்னும் மணவிழா நிகழும்.

   இனி, களவுக்காலத்தில் கூட்டம் தடைப்படுவதால், காதலி தன் காதலனைக் காணப்பெறாமல் மனம் வருந்தி மேனி வேறுபடும் போது, பெற்றோர் வேலன் என்னும் மந்திரக்காரனை வர வழைத்து தம் மகள் நோய்க்குக் கரணியம் (காரணம் ) வினவுவதும், அவன் அது முருகனால் நேர்ந்ததென்று கூறி, வெள்ளாட்டுக் கறியும் கள்ளும் விலாப் புடைக்க வுண்டு வெறியாட்டு என்னும் கூத்தை நிகழ்த்தி அந் நோயைப் போக்குவதாக நடிப்பதும் உண்டு. அன்று காதலி நேராகவோ தன் தோழி வாயிலாகவோ, தன் பெற்றோரிடம் உள்ளதைச் சொல்லிவிடுவாள். அது அறத்தொடு நிற்றல் எனப் படும். தன் காதலனன்றி வேறு யார்க்கும் தன்னைப் பேசினும், காதலி அறத்தொடு நிற்பாள்; அதன்பின் காதலனுக்கு மணஞ் செய்து வைக்கப் பெறுவாள். மணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்குப் பரிசம் கொடுப்பர். மணமகன் பரிசம் பெறும் அநாகரிக மானங்கெட்ட ஆரிய இழிவழக்கு அக்காலத்தில்லை.

   தமிழ்ப் பெண்டிர் கற்பிற் சிறந்தவராதலின், ஒருவரை மணந்தபின் அல்லது காதலித்த பின் வேறொருவரையும் கனவிலும் கருதுவதில்லை; வேறு எவரையேனும் மணக்க நேரின், உடனே உயிரை விட்டுவிடுவர்.

   காதலர் கூடும் கூட்டம், உடம்பாற் கூடுவதும் உள்ளத்தாற் கூடுவதும் என இருவகை. இவற்றுள் முன்னது மெய்யுறு புணர்ச்சி என்றும், பின்னது உள்ளப்புணர்ச்சி என்றும் சொல்லப்பெறும். கற்புடைப் பெண்டிர்க்கு இரண்டும் ஒன்றே. இதனாலன்றோ, திலகவதியம்மையார் தமக்குப் பேசப் பெற்றிருந்த கலிப்பகையார் போர்க்களத்திற் பட்டபின் இறக்கத் துணிந்ததும், அதன்பின் தம் ஒற்றைக்கொரு தம்பியார் திருநாவுக்கரசரின்பொருட்டு உயிர் தாங்கியதும், இறுதிவரை மணவாதிருந்ததும் என்க.

  (ஆரியர் வருமுன்) கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கை, ஊர்த் தலைவன், குடி முதியோன், மங்கல முதுபெண்டிர், குலப் பூசாரி முதலியோர் நடத்தி வைத்தனர்.

  பண்டையரசரும் பெருஞ்செல்வரும் பெரும்பாலும் சிற்றின்ப வுணர்ச்சி சிறந்து, பல தேவியரையும் காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற்பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமையால். ஓருயிரும் ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதப்பாண்டிய னும் அவன் தேவியும் போன்ற ஒருசில அரசக் குடும்பங்களிடை யும், உழவரும் இடையரும் போன்ற பொதுமக்களிடையும். புல மக்களிடையும்தான் பெரும்பாலும் இருந்துவந்தது.