பக்கம் எண் :

6பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

6. சமைத்தல்.

"பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்" (மலைபடு. 417.)

  செய் என்னும் வினைச்சொல்லினின்று, திருந்த அல்லது அழகாய்ச் செய்யப்பெற்றது என்னும் பொருளில், செய் என்னும் நிலப்பெயரும் செய்யுள் என்னும் இயற்றமிழ்ப் பாட்டின் பெயரும் தோன்றியிருப்பது போன்றே; பண் என்னும் வினைச்சொல்லி னின்றும், திருந்த அல்லது இனிதாய்ச் செய்யப்பெற்றது என்னும் பொருளில், பண்ணை என்னும் நிலப் பெயரும் பண் என்னும் இசைத்தமிழ் அமைப்பின் பெயரும் தோன்றியுள்ளன.

  பண்பாடு பல பொருட்கு உரியதேனும், நிலமும் மக்கள் உள்ளமும்பற்றியே பெருவழக்காகப் பேசப் பெறும். ஆங்கிலத்தி லும் culture என்னும் பெயர்ச்சொல் சிறப்பாக நிலப் பண்பாட்டை யும் உளப் பண்பாட்டையும் குறிப்பது கவனிக்கத் தக்கது. cultivate என்னும் வினைச்சொல்லும் அங்ஙனமே. இவ் விருவகைப் பண்பாட்டுள்ளும், மக்களைத் தழுவிய உளப் பண்பாடே சிறப்பாகக் கொள்ளவும் சொல்லவும் பெறும்.

  சேலங் கல்லூரி மேனாள் முதல்வர் பேரா. இராமசாமிக் கவுண்டர் குடும்பம் பண்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கும், தாய் மொழியாகிய தமிழைத் தலைமையாகப் போற்றும் செட்டிகுளம் பண்பட்ட வூருக்கும், தலைசிறந்த எடுத்துக்காட்டாம்.

  உள்ளம் பண்படுவது பெரும்பாலும் கல்வியாலாதலால், பண்பாடு கல்வி மிகுதியையுங் குறிக்கும்.

  தமிழில் தன்மையைக் குறிக்கும் சொற்களுள், இயல்பு என்பது இயற்கையான தன்மையையும், பண்பு என்பது பண்படுத்தப்பெற்ற நல்ல தன்மையையும், குறிக்கும்.

3. நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு

  
நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது.

  இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லாவகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்க முள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும்,