பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்5

"வருங்குன்ற மொன்றுரித் தோன்தில்லை யம்பல வன்மலயத்
 திருங்குன்ற வாணர் இளங்கொடி யேயிடர் எய்தலெம்மூர்ப்
 பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
 கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே"
(15)


என்னும் திருக்கோவைச் செய்யுளையும்; நோக்கித் தெளிக. இனி, நகை என்னும் சொல் பல்லையும் முத்தையும் குறித்தலையும் நோக்குக.

  நகரம் என்னும் தென்சொல்லைப் போன்றே அதனின்றும் திரிந்தமைந்த நாகரிகம் என்னும் தென்சொல்லையும், வடவர் கடன்கொண்டு வடமொழியில் வழங்கி வருவதுடன், கடுகளவும் உண்மையும் நன்றியறிவுமின்றி அவற்றை வடசொல்லேயென்று வலித்தும் வருகின்றனர். வடமொழி ஒரு தனிமொழி யன்றென்பதும், குறைந்த பக்கம் ஐந்தி லிருபகுதி தமிழென்பதும், என் வடமொழி வரலாறு" என்னும் நூலில் வெள்ளிடை மலையாய் விளக்கப் பெறும். ஆண்டுக் காண்க.

2. பண்பாடு என்னும் சொல் விளக்கம்

  பண்படுவது பண்பாடு. பண்படுதல் சீர்ப்படுதல், அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப் பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் "பண்பட்ட செந்தமிழ்" (தனிப்பாடல்) என்றும், திருந்திய வுள்ளத்தைப் பண்பட்ட வுள்ள மென்றும், சொல்வது வழக்கம்.
பண் என்னும் பெயர்ச்சொற்கு மூலமான பண்ணுதல் என்னும் வினைச்சொல்லும், சிறப்பாக ஆளப்பெறும் போது, பல்வேறு வினைகளைத் திருந்தச் செய்தலையும் பல்வேறு பொருள்களைச் செவ்வையாய் அமைத்தலையும், குறிக்கும்.


பண்ணுதல் = 1. நிலத்தைத் திருத்துதல்.
(பண்ணப்பட்ட மருதநிலம் பண்ணை.)
2. ஊர்தியைத் தகுதிப்படுத்துதல்.
  "பூதநூல் யானையொடு புனைதேர் பண்ணவும்" (புறம். 12)
3. சுவடித்தல் (அலங்கரித்தல்)
  "பட்டமொ டிலங்கல் பண்ணி" (சூளா. கல்யா. 14)
4. இசையல கமைத்தல்.
  "பண்ணல் பரிவட்டணை யாராய்தல்" (சீவக. 657, உரை)
5. பண் அமைத்தல்.
  "மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்" (மலைபடு. 534.)