3. பேரூர் நகர், நகரி, நகரம் என்னும் முச்சொல்வடிவும், முதலில் அரசன் வாழும் தலைநகரையும் அவன் சென்று தங்கும் கோநகரையும் குறித்து, பின்பு எல்லாப் பேரூர்களையும் பொதுப்படச் சுட்ட லாயின. அதனால், அரசன் இருக்கும் அல்லது தங்கும் நகரைத் தலை அல்லது கோ என்னும் அடைகொடுத்துக் கூற வேண்டியதாயிற்று. "கோநகர் எதிர்கொள" (சிலப். 27:255) அரசனுக்கும் தெய்வத்திற்கும் ஒருபுடை யொப்புமை யிருத்தலால், கோயில் என்னும் சொற்போன்றே கோநகர் என்னும் சொல்லும் இருவர் இருக்கையையும் குறிக்கும். கோயில் = 1. அரண்மனை. "கோயில் மன்னனைக் குறுகினள்" (சிலப். 20:47) (கோ = அரசன், இல் = வீடு) 2. தெய்வப் படிமையிருக்கை. கோநகர் = கோயில். "மாயோன் கோநகர் எட்டும்" (கந்தபு. திருநகரப். 88) பெருநகரை நகரம் என்று சொல்லினும் போதும். ஆயின், அவ் விலக்கணம் இன்று அறியப்படாமையால், மாநகர் என்று சொல்ல வேண்டியதாகின்றது. இங்ஙனம் நாகரிகம் என்னும் சொற்கு மூலமான நகர் என்னும் சொல் தூய தமிழாயிருப்பினும், நகர (Nagara) என்னும் வட சொல்லின் திரிவாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் (அகராதியில்) காட்டப்பட்டுளது. இது தமிழரின் அறியாமையையும் தமிழ்ப் பேராசிரியரின் அடிமைத் தனத்தையுமே உணர்த்தும். நகர் என்னும் மூலவடிவம் வடமொழியி லில்லை. அதன் திரிவான நகரம் என்னும் வடிவே, வேருந்தூரும் மொழிப் பொருட் கரணியமுமின்றி வடமொழியில் வழங்கி வருகின்றது. நகரி என்னும் வடிவம் வடமொழியில் (நகரீ என்று ஈறு நீண்டு) வழங்கினும், அதன் ஈற்றிற்கு அங்குத் தனிப் பொருளில்லை. நகர் என்னும் சொல்லிற்கு விளங்கிய வெண்மையென்பதே வேர்ப்பொருளென்பதை, வெண்பல்லைக் குறிக்கும் நகார் என்னும் சொல்லையும்; மாளிகையின் விளங்கிய தோற்றம் அதன் வெண் சாந்தினால் ஏற்பட்ட தென்பதை, "புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து" (378) என்னும் புறநானூற் றடியையும் |