பக்கம் எண் :

88பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

தச்சனை மரங்கொல் தச்சன் என்பது இலக்கிய வழக்கு. கொல்லுதல் வெட்டுதல்.

"மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
 மழுவுடைக் காட்டகத் தற்றே"
(புறம். 206: 11-2)

   தச்சுவேலை பெரும்பாலும் பல பலகைகளையும் கால்களை யும் ஒன்றாகத் தைத்தலாதலால், அப் பெயர் பெற்றது. தைச்சு - தச்சு. தைத்தல் இணைத்தல் அல்லது பொருத்துதல்.

"பலகை தைத்து" (பாரத. கிருட்டிண. 102).
ஐகார முதற்சொல் அகரமுதற் சொல்லாகத் திரிவது இயல்பே.
ஒ. நோ: ஐ- ஐந்து -அஞ்சு
மை - மைஞ்சு - மஞ்சு - முகில்.
பை - பைஞ்சு - பஞ்சு - பஞ்சி.
கைச்சாத்து - கச்சாத்து

   ஆங்கிலத்திலும், தட்டுமுட்டுகள் செய்யும் தச்சனை Joiner என்று கூறுதல் காண்க.

   தச்சன் என்பது, வடமொழியில் தக்ஷ என்றும், கிரேக்கத்தில
் tekton என்றும் திரியும். உண்மை இங்ஙனமிருப்பவும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் தொகுத்த பிராமணத் தமிழ்ப் புலவர் தக்ஷ என்னும் சொல்லினின்று தச்சன் என்பது வந்ததாகக் குறித்திருக்கின்றனர்.

   பாண்டியன் தேவியின் வட்டக்கச்சைக் கட்டில், பின்வருமாறு யானை மருப்பினால் (தந்தத்தினால்) சிறந்த வேலைப்பாட்டுடன் செய்யப் பெற்றதாக, நெடுநெல்வாடை கூறுகின்றது.

   நாற்பதாண்டு அகவையுள்ளதும், முரசுபோன்ற பெரிய கால்களையும் அழகிய புகர் நிறைந்த மத்தகத்தையும் உடையதும், போருக்குச் சிறந்ததென்று பெயர் பெற்றதும், போர் செய்து இறந்ததுமான, யானையின் தானே வீழ்ந்த கொம்பை இருபுறமும் கனமும் செம்மையும் ஒப்பச் செதுக்கி, கூரிய சிற்றுளியாலே பெரிய இலைத்தொழிலை இடையிலே அமைத்து; நிறைசூலியின் பால் கட்டிய மார்பு போலத் திரண்ட குடத்தையும், உள்ளிப்பூடு போன்ற கடைச்சலையும், கொண்ட கால்களைப் பொருத்தி; மூட்டுவாய் மாட்சிமைப்படத் தகடுகளை ஆணிகளால் தைத்து, அழகாகத் தொடுத்த முத்துக் குஞ்சங்களைச் சுற்றிவரத் தொங்கவிட்டு; புலியின் வரியைக் கொண்ட பொலிவு பெற்ற கச்சாலே தகடுமறைய நடுவிடம் முழுதும் பின்னி; குற்றமற்றுப் பேரளவு கொண்டு பெரும் பெயர்பெற்ற வட்டக்கச்சைக் கட்டில்,