"இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை ............................................. நல்லரா நடுங்க உரறிக் கொல்லன் ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும்" (நற். 125: 1-4) "கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே" (புறம். 180: 12-3) என்னும் பகுதிகள், இற்றைக் கொல்லத்தொழில் நிலையே அன்று மிருந்தமையைக் காட்டும். "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல்" (குறள். 505) "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" (குறள் 267) "பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண். 220-1) "சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் பொன்னுரை காண்மரும்" (மதுரைக். 512-3) "ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்கா சணிந்த அல்குல் ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ" (புறம். 353) "உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும் நிலங்கரி சுள்ளியங் காடிறந் தோரே" (குறுந். 67). என்பவை பொற்கொல்லரின் பணியைக் குறிப்பன. குறுந்தொகைச் செய்யுளில், பொற்கொல்லன் புதுக்கம்பியிற் கோக்குமாறு தன் உகிரால் (நகத்தால்) பற்றியிருக்கும் உருண்டையான பொற்காசிற்கு, வேப்பம்பழத்தைக் கவ்விக் கொண்டிருக்கும் கிளிமூக்கை உவமங் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. தச்சு வேலையிற் சிறந்த வேலைப்பாடுள்ள செய்பொருள் தேராகும். "எம்முளும் உளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே" (புறம்) என்பது தேர்த்தச்சனைக் குறித்தது. |