பக்கம் எண் :

94பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

வனைக் குறிக்கும் சொற்கும் வேறுபாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறுபட்டிருப்பதும், கண்டு உண்மை தெளிக.

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
 பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
 மொழிபெயர் தேஎத்த ராயினும்
 வழிபடல் சூழந்திசின் அவருடை நாட்டே."
(குறுந். 11)

என்னும் குறுந்தொகைச் செய்யுள், வடுகநாட்டிற்கும்,

"நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
 தங்கலர் வாழி தோழி
 ............................................
 மாகெழு தானை வம்ப மோரியர்
 புனைதேர் நேமி யுருளிய குறைத்த
 இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர்

 மாசில் வெண்கோட் டண்ணல் யானை
 வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி
 மாநிலம் நெளியக் குத்திப் புகலொடு
 காப்பில வைகும் தேக்கமல் சோலை
 நிரம்பா நீளிடைப் போகி
 அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே"
(அகம். 25)

என்னும் நெடுந்தொகைச் செய்யுள், விந்திய மலைக்கப்பாற்பட்ட வடநாட்டிற்கும், வணிகச் சாத்துக்கள் போய்வந்தமையைக் குறிப் பாய்த் தெரிவித்தல் காண்க.

நீர்வாணிகம்

"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
 புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ"
(அகம். 255:1-2)

என்பதால், கடலைப் பிளந்து செல்லும் மாபெருங் கப்பல்கள் தமிழகத்திற் செய்யப்பட்டமை அறியப்படும்.

   கப்பல்கள் தங்கும் துறைமுகத்தைச் சேர்ப்பு, கொண்கு என்பது இலக்கிய வழக்கு.

   கீழ் கடற்கரையில் கொற்கை, தொண்டி, புகார் (காவிரிப்பூம் பட்டினம்) என்னும் துறைநகர்களும், மேல் கடற்கரையில் வஞ்சி, முசிறி, தொண்டி என்னும் துறைநகர்களும் இருந்தன. இடைகழகக் காலத்தில் பாண்டியர் துறைநகர் குமரியாற்றின் கயவாயில் (estuary) அமைந்திருந்தது. அதன் தமிழ்ப் பெயர் (அலைவாயில்?) மறைந்து, அதன் மொழிபெயர்ப்பான கபாடபுரம் என்னும் வடசொல்லே இன்று இலக்கிய வழக்கிலிருக்கின்றது.