பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்93

என்னும் உலக வழக்குத் தொடர்மொழியால், கோடிப் பொன் தேடிய செல்வர்க்குக் கொடியும் ஒன்று கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

   எட்டுதல் உயர்தல். எட்டம் உயரம். எட்டி உயர்ந்தோன். எட்டி-செட்டி (முதன்மெய்ப் பேறு).

   ஒ.நோ: ஏண் - சேண். ஏமம் - சேமம். செட்டியின் தன்மை செட்டு.

   சிரேஷ்டி என்னும் வடசொல், திரு என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபான ச்ரீ(ஸ்ரீ) என்பதன் உச்சத்தர
(superlative degree) வடிவினின்று திரிந்ததாகும்.

 

ஒப்புத்தரம் உறழ்தரம் உச்சத்தரம்

ச்ரீ(ஸ்ரீ)

ச்ரேயஸ்

ச்ரேஷ்ட

நிலவாணிகம்

  நிலவாணிகர் வணிகப் பண்டங்களைக் குதிரைகள் மேலும் கோவேறு கழுதைகள் மேலும் ஏற்றிக்கொண்டு கூட்டங் கூட்ட மாய்க் காட்டுவழியே தமிழகத்தையடுத்த வடுகநாட்டிற்கும், நெடுந் தொலைவான வடநாட்டிற்கும், காவற் படையுடன் சென்று ஏராளமாய்ப் பொருளீட்டி வந்தனர். அவ் வணிகக் கூட்டங்கட்குச் சாத்து என்று பெயர். சாத்து கூட்டம். சார்த்து சாத்து. சார்தல் சேர்தல்.

சாத்து = 1. கூட்டம்.
"சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்" (கல்.63 : 32)
2. வணிகக் கூட்டம்.
"சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்" (சிலப். 11 : 190)
சாத்து என்பது வடமொழியில் ஸார்த்த என்று திரியும்.

   வணிகச் சாத்துகளின் காவல் தெய்வமாகிய ஐயனார்க்குச் சாத்தன் என்று பெயர். அதனால். வணிகர்க்குச் சாத்தன் சாத்துவன் என்னும் பெயர்கள் இயற்பெயராய் வழங்கின. ஐயனார் கோயிலில், வணிகச் சாத்தைக் குறித்தற்கு மண்குதிரை யுருவங்கள் செய்து வைத்திருத்தலைக் காண்க. சாத்தன் என்னும் தெய்வப்பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும்.

   இனி, வணிகச் சாத்தின் தலைவனும் சாத்தன் எனப்படுவான். இப் பெயரும் ஸார்த்த என்றே வடமொழியில் திரியும். இதனால், வட மொழியில் சாத்தைக் குறிக்கும் சொற்கும் சாத்தின் தலை