பக்கம் எண் :

96பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"இன்னிசை முரசமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்"
(மதுரைக். 80 - 3)

   கப்பலில் வந்த பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணி களாற் கரை சேர்க்கப்பட்டன.

"கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து"
(புறம்.343: 5-6)

அக்காலத்திற் காவிரியாறு அகன்றும் ஆழ்ந்தும் இருந்ததால், பெருங்கப்பல்களும் கடலில் நிற்காது நேரே ஆற்றுமுகத்திற் புகுந்தன.

"........கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்"
(புறம்.30:10-2)

   "பாய் களையாது பரந்தோண்டா தென்பதனால், துறை நன்மை கூறியவாறாம்" என்று பழைய வுரை கூறுதல் காண்க. கரிகால் வளவன் காவிரிக்குக் கரை கட்டியது இங்குக் கருதத்தக்கது.

   நீர்வணிகம் நிரம்ப நடைபெற்றதால், துறைமுகத்தில் எந் நேரமும் கப்பல்கள் நிறைந்திருந்தன.

"வெளிவிளங்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை" (
பட்டினப். 172-4)

   ஏற்றுமதியும் இறக்குமதியும் ஏராளமாயிருந்ததால், நாள் தோறும் ஆயத்துறைக் கணக்கர் மூடைகளை நிறுத்து உல்கு (சுங்கம்) வாங்கி வேந்தன், முத்திரையைப் பொறித்துக் குன்றுபோற் குவித்து வைத்திருந்தனர். அவற்றிக்குக் கடுமையான காவலிருந்தது.

"வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
............................
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி