அ + காலம் = அக்காலம் வல்லினமெய் அ + மனிதன் = அம்மனிதன் மெல்லினமெய் இங்ஙனமே பிறவும். உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஈரெழுத்திருத்தலால், உயிர்மெய்ம் முதலெல்லாம் மெய்ம்முதலென்றும் உயிர்மெய் யீறெல்லாம் உயிரீறென்றும் தெரிந்துகொள்க. அது என்னுஞ் சொல் தனித்துவரினும் சொல்லீறாய் வரினும் ஏகாரத்தொடு புணரும்போது உகரங்கெட்டும் கெடாதும் இருவகையாய்ப் புணரும். உ-ம்: அதே, அதுவே; அழைப்பதே, அழைப்பதுவே. எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணர்தல் எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணரும்போது, ஒன்று என்பது உயிர்க்குமுன் ஓர் என்றும், மெய்க்கு முன் ஒரு என்றும் திரியும். உ-ம்: ஓர் ஊர், ஒரு மனிதன். இக்காலை ஓர் என்பது மெய்ம்முன்னும் வைத்தெழுதப்படுகின்றது. உ-ம்: ஓர் மரம். இரண்டு என்பது உயிர்க்கு முன் ஈர் என்றும், மெய்க்கு முன் இரு என்றும் திரியும். உ-ம்: ஈர் ஆயிரம், இரு திணை மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையினமெய்க்கு முன்னும் மூ என்றும், பிறமெய்கட்கு முன் மு என்றும் திரியும். உ-ம்: மூவுலகு, மூவேந்தர் முக்காலம், மும்மழை நான்கு என்பது நால் என்று திரியும். உ-ம்: நாலாள், நாற்பொருள் ஐந்து என்பது ஐ என்று திரியும். உ-ம். ஐயாயிரம், ஐம்பூதம், ஐந்நூறு ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும்; மெய்க்கு முன் குறுகும். உ-ம்: ஆறாயிரம், அறுகால் ஏழு என்பது உயிர்க்குமுன் ஏழ் என்றும், மெய்க்கு முன் எழு என்றும் திரியும். உ-ம்: ஏழுலகு, எழுபிறவி எட்டு என்பது எண் என்று திரியும். உ-ம்: எண்ணாயிரம், எண்குணம். இரண்டுமுதல் எட்டுவரையுள்ள எண்ணுப்பெயர்கள் இரண்டுபேர், மூன்றுநாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும். ஆயினும், அது அத்துணைச் சிறப்பின்று. |