பக்கம் எண் :

எழுத்தியல்47

    ஒருவரைப் பல பெயர்களாற் சிறப்பித்துப் பெயர்தோறும் வினை கொடுப்பின், ஒரு வினைகொடுத்துக் கூறல் வேண்டும்.

    உ-ம்: ஐய! வருக, அண்ணால்! வருக, அறிஞ! வருக.

    இங்ஙனமன்றி, ஐய! வருக, அண்ணால் அமர்க என வேறு வினை கொடுப்பின் எழுவாய் வேறுபடல் காண்க.

    பல தொடர்கள் ஒரு வினைகொண்டு முடியின், தனித்தனி அம் முடிபிற் கேற்றவா யிருத்தல் வேண்டும்.

    உ-ம்: ஏசு தாம் உலக முடிவில் இங்குத் திரும்ப வருவதாகவும், தம்மை
    நம்பினாரெல்லாம் வீட்டைப் பெறுவாரென்றும் சொல்லிப் பரத்திற் கெழுந்தருளினார்.

xiv. வாக்கிய முடிபு

முன் முடிபு, பின் முடிபு -
Loose and Periodic Constructions

    ஒரு கலப்பு வாக்கியத்தில், தலைமை வாக்கியத்தை முற்கூறுவது முன் முடிபாம்; பிற் கூறுவது பின் முடிபாம்.

    உ-ம்: மாணிக்க நாயகர் கூறுகின்றார், மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லலாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றன வென்று - முன்முடிபு.

    மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றனவென்று, மாணிக்க நாயகர் கூறுகின்றார் - பின்முடிபு.

    முன்முடிபினும் பின்முடிபே சிறப்புடைத்து.

xv. வாக்கிய அளவு -
Length of a Sentence

    ஒரு வாக்கியம் மிகக் குறிதாயும் மிக நெடிதாயு மில்லாது, வாசித்தவுடன், அல்லது வாசிக்கக் கேட்டவுடன், முழுப்பொருளும் ஒருங்கு தோன்றுமாறு ஓர் அளவா யிருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தின் பேரெல்லை பத்து வரியாயிருத்தல் நலம்.

xvi. வாக்கியவொருமை -
Unity of Sentence

    ஒரு வாக்கியத்தில் ஒரு கருத்தே யிருத்தல் வேண்டும்.

    ஒரு வாக்கியத்தில் பல (தலைமைக்) கருத்துகளிருப்பினும், ஒரே வாக்கியத்திற்கேற்ற செய்தி பல சிறு வாக்கியங்களாக எழுதப்படினும், ஒரு வாக்கியமாவது, அதன் இடைப்பிவைப்பாவது (
paranthesis ) மிக நெடிதா யிருப்பினும், வாக்கிய வொருமை கெடும். இதையறிந்து கடைப்பிடிக்க.

xvii. ஒருபோகமைப்பு -
Parallel Construction

    ஒரு பெரு வாக்கியத்தின் பகுதிகளான எச்சச் சொற்றொடர்களெல்லாம், ஒரே போங்கான அமைப்பாயிருப்பது ஒருபோகமைப்பாகும்.