பக்கம் எண் :

48கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

    உ-ம்: உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்;
   தாழ்ந்தோர் பிறர் குற்றங்களையே எடுத்துக் கூறுவர்.

    இங்ஙனமன்றி,

   உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்;
   பிறர் குற்றங்களையே தாழ்ந்தோர் எடுத்துக் கூறுவர்,
   என்பது ஒருசார் வழுவாகும்.

2. பாகியமைப்பு -
Structure of Paragraph

    ஒரு பாகி ஒரே ஒரு குறிப்பை, அல்லது கருத்தைத் தழுவியதாய் எவ்விதத்தும் காற்றாளில் ஒரு பக்கத்திற்கு மிகாததாயிருத்தல் வேண்டும் பாகிப்பொருள் (
Theme of Paragraph ) முதலிலேனும் இடையிலேனும் கடையிலேனும், குறிப்பாகவேனும் வெளிப்படையாகவேனும் இருக்கலாம். முதலிலிருப்பதும் வெளிப்படையாயிருப்பதும் சிறப்பாகும். பாகிப்பொருள் பெயராய்மட்டுமல்லாது முழுவாக்கியமா யிருத்தல்வேண்டும். ஒரு பாகி ஒரு வாக்கியமாயேனும் பலவாக்கியங்களாயேனு மிருக்கலாம்; பத்துவரிக்கு மேற் பட்டதாயின் பலவாக்கியங்களா யிருத்தல் நலம். பாகியைச் சிலர் பத்தியென்பர்.


3. உம்மைத்தொடர் -
The Conjunction உம்


    எண்ணும்மை : பல சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உம்மைச்
           சொல்லால் இணைக்கப்படின் சொற்றொறும் அல்லது
           சொற்றொடர் தொறும் உம்மை வேண்டும்.

    உ-ம்: அறமும் பொருளும் இன்பமும் வீடும்.

    ஒரு வாக்கியத்தில் உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எல்லாம், ஒரு வடிவினவா யிருத்தல் வேண்டும்.(இங்கு ஒருபோகமைப்பை நினைக்க)

    உ-ம்: பாண்டித்துரைத் தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ளலு மாயிருந்தார்.

    ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராயும் அமைச்சராயும் புலவராயு மிருந்தார்.

    ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு.

    ஐயவும்மை : சிலவிடத்து உம்மைச்சொல் ஆவது (
either... or)
           என்னும் பொருள்பட வருவதுண்டு. அங்ஙனம் வருவது
           ஐயவும்மையாகும்.

     உ-ம்: புகைவண்டி முன்னும் பின்னும் போகும்.

    முற்றும்மை : ஒருவகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையுங்
          குறிக்கும் போது உம்மை கொடுத்துக் கூறவேண்டும்.