பக்கம் எண் :

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே 35

-35-

 

5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே

 

சோழர் காலத்திலும் கங்கைக்கரையில் தெலுங்கச் சோழர் ஆண்டனர் என்னும் செய்தியும், வடநாட்டுக் கதிரவன்குல அரசர்க்கும் திங்கள்குல அரசர்க்கும் முறையே சோழ பாண்டியரோ டிருந்தவுறவும் குமரிநாட்டுத் தோன்றிய தமிழின் தொன்மையும், இன்னும் வடநாட்டில் திரவிட மொழி களுண்மையும், ஆரிய வருகைக்குமுன் நாவலந் தண்பொழில் முழுதும் மூவராட்சிக்குட்பட்டிருந்ததோ என ஐயுறத் தூண்டும்.

    உதியன் என்பது சேரர்குடிப் பெயர். ஆதன் என்பது பண்டைக் காலத் தியற்பெயர்களுள் ஒன்று. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் வேறு; செங்குட்டுவன் தந்தையாகிய சேரலாதன் வேறு; தமிழின் தொன்மையைக் குறைக்க விரும்பும் தமிழ்ப் பகைவரே, இவ் விருவரையும் ஒருவராக மயக்குவர்.

    'இமயமலையை எல்லையாகக் கொண்டு சேரமன்னர் எந்தக் காலத்திலும் அரசாண்டதாகத் தெரியவில்லை' என்று கட்டுரைகாரர் கூறுவது, கிறித்துவுக்கு முற்பட்ட சேரவேந்தர் வரலாற்றையெல்லாம் கண்ட பின் கூறுவதுபோல், வேடிக்கையாகத் தோன்றுகின்றது. செங்குட்டுவனிலும் சேரலாதனிலும் பெரிய சேரவேந்தர் எத்தனையோபேர், வரலாற்றுக் காலத்துக்கு முன் குமரிமுதல் பனிமலைவரை ஆண்டிருக்கலாமே!

    'தென்குமரி வடபெருங்கற்
     குணகுடகட லாவெல்லை
     குன்றுமலை காடுநா
     டொன்றுபட்டு வழிமொழியக்
     கொடிதுகடிந்து கோறிருத்திப்
     படுவதுண்டு பகலாற்றி
     யினிதுருண்ட சுடர்நேமி
     முழுதாண்டோர் வழிகாவல!' 
(புறம். 17)

    என்று, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையை, இமயமலையை எல்லையாகக்கொண்டு ஆண்ட சேரவேந்தரின் வழிவந்தோனாக, குறுங் கோழியூர்கிழார் பாடியிருப்பது எத்துணைத் தெள்ளிதுந் தேற்றமுமாக வுள்ளது!

    'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
     குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
     வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
     தென்றிசை யாண்ட தென்னவன் வாழி' 
(சிலப். 11:19:22)

    என்று இளங்கோவடிகள் பொதுப்படக் கூறினும், அது ஒரு தனிப்பட்ட பண்டைப் பாண்டியன் செய்தியையன்றோ எடுத்துரைக்கின்றது! அப் பாண்டியன்போல் சில, சேரவேந்தரும் பனிமலைவரை ஆண்டிருக்க லாமே! ஒரு தமிழ் வேந்தன் பனிமலையை எல்லையாகக் கொண்டு