தமிழுக்குள் ஒரு சொல்
நுழைந்ததெனின், அது நீக்கவும் மாற்றவும் முடியாததாயிருக்கும். ஆகவே 'கார்' என்னும்
சொல் மக்கள் வாய்க்குள் நுழைந்தது, மொழித்துறையிற் புண்பாட்டு வளர்ச்சியேயன்றிப்
பண்பாட்டு வளர்ச்சியன்று.
திரு.மகிழ்நன் தமிழில்
எழுதியுள்ள தாமசு ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்க. அதில் இயங்கி
என்னும் சொல்லைக் காணலாம்.
5. ''மயில் இந்திய
நாட்டுப் பறவை. திராவிடமொழியைச் சேர்ந்த சொல்.''
திராவிடமொழிச்சொல் என்பதினும் தமிழ்ச்சொல்
என்பது தகும். திராவிடம் இன்று 19 மொழிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தமிழைத்
திராவிடத்தினின்று பிரிக்க வேண்டிய நிலைமை இன்று நேர்ந்துள்ளது.
மயில் என்னும் சொல்
திராவிடமொழிகளிற் பின்வருமாறு வேறு பட்டும் உளது.
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு மயில் மயில் நவில் நமலி மைரெ மலையாளம்
பண்டைச் சேரநாட்டுத் தமிழே.
6. ''வடமொழியில்
இருந்தும் உயிருள்ளவையாய் வழக்கில் இருந்த சொற்கள் தமிழில் வந்துதானே
வழங்கும்?''
வடமொழி என்பது, வேத ஆரியம்
அல்லது வேதமொழி, சமற் கிருதம் என இருநிலைகளையுடையது. வேத ஆரியம் வேதகாலத்தி லேயே
வழக்கற்றுப்போய்விட்டது. வழக்கற்றுப்போன வேத ஆரியத்தோடு, அக்காலத்து வட்டார
மொழிகளாகிய பிராகிருதங்களைச் சேர்த்து ஆக்கிக் கொண்ட அரைச் செயற்கையான
இலக்கிய நடைமொழியே (Literary dialect) சமற்கிருதம்.
பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது; முன்னுள்ளது; இயற்கையானது. சமற்கிருதம்
நன்றாய்ச் செய்யப்பட்டது; பிற்பட்டது. செயற்கையானது. ஆதலால், வடமொழிச் சொற்களை
உயிருள்ளவையாய் வழக்கிலிருந்தவை என்று சொல்வது தவறாம். தமிழையும் அதன் வழிப்பட்ட
திரவிடமொழிகளையும் ஆரியவண்ண மாக்குவதற்கு, வேண்டுமென்று புகுத்தப்பட்ட வேண்டாச்
சொற்களே வடமொழிச் சொற்கள். அவை, தனித்து வாழும் ஆற்றலின்றிப் பிற
வுயிரிகளைச் சார்ந்தே வாழும் உண்ணிகளைப் (parasites)
போன்றவையே.
7. ''புத்தர் என்ற பெயர் தமிழல்ல என்று தள்ள
முடியுமா?''
புத்தர் என்பது ஒருவரின் இயற்பெயர் (proper
name). அதை எங்ஙனம் மொழிபெயர்த்தல் சாலும்? புத்தன் என்பது, பொதுச்
சொல்லாயின், |