பக்கம் எண் :

62மறுப்புரை மாண்பு

-62-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    ''காப்புடைய வெழுமுருக்கி'' (புறம்.14).

    2. அழித்தல்.

    ''விறல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி'' (சிறுபாண். 247)

    3. கொல்லுதல், (திவா.)

முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முரிதல் = ஒடிதல், கெடுதல்.

    முருங்கைமரம் அல்லது கிளை எளிதாய் ஒடியும் மரம். முருங்குவது முருங்கை.
முருங்கைக்காய்போற் காய்ப்பதும் முள்ளுள்ளதுமான முள் முருங்கை மரம், முருக்கு எனப்பட்டது. இது வலித்துத் திரிந்த திரிசொல்.

    ''முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை'' (பதிற்.23:26)

முருக்கமலர் செந்நிறமாயிருப்பதால் எரிமலர் எனப்படும்.

    ''எரிமலர்ப் பவளச் செவ்வாய்'' (சீவக. 662)

    முருக்கு என்பது முருங்கு என்றும் நிற்கும். புத்தமித்திரன் என்னும் பித்தமித்திரன் பிதற்றிய வீரசோழியத்துக்கு உரை கண்ட பெருந்தேவனார், ''முருங்கா வென்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்தவாறுங் கொள்க'' என்று 11ஆம் நூற்றாண்டிற் கூறிய வுரையை, வரலாறு, மொழி நூல் முதலிய நூலறிவும் ஆராய்ச்சியும் மிக்க இக்காலத்திற் கொண்டு கூறுவது எத்துணைப் பேதைமையும் அடிமைத்தனமும் ஆகும்!

    கங்கைக்கரை நாட்டைச் சேர்ந்த விசயன் என்னும் இளவரசன், கி.மு. 543-ல் ஒரு படையோடு வந்து இலங்கையில் இறங்கிச் சிங்கள இனத்தைத் தோற்றுவித்தான் என்பது பழைய வரலாறு. அதனால், இலங்கையும் அதன் மொழியும் சிங்களம் எனப்பட்டன.

    பெருந்தேவனார் ''முருங்காவென்னும் சிங்களச் சொல்'' என்று இடத்தின்மேல் மட்டும் ஏற்றிக் கூறியிருப்பவும், நம் பேராசிரியர் ''சிங்களவர்கள் நமக்குக் கொடுத்த அன்பின் காணிக்கை'' என்று அவ் வினத்தார் மீதே ஏற்றிக் கூறிவிட்டனர். விசயன் கங்கைக்கரை நாட்டினின்று வந்த பொழுதே முருங்கை மரத்தையும் உடன்கொண்டுவந்தான் என்பது அவர் கருத்துப்போலும்!

    ''முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்''

    ''முருங்கை பருத்து முட்டுக்கால் ஆகுமா?''

    ''முருக்கம்பூ சிவந்ததினால் முடிப்பார் உண்டா?''

    என்பவை தொன்றுதொட்டு வழங்கி வரும் பழமொழிகள். முருங்கைப் பட்டை, முருங்கைப் பிசின் ஆகியவை பிள்ளை மருத்துவத்திற் பெயர் பெற்ற மருந்துகள். முருங்கைக்காயும் முருங்கைக் கீரையும் தமிழர் தொன்று தொட்டு உண்டு வரும் உணவு வகைகள்.