பக்கம் எண் :

150வடமொழி வரலாறு

     தில்லையிற் சிற்றம்பலம் பேரம்பலம் என ஈரம்பலங்க ளுண்டு.
அவற்றுள் சிற்றம்பலமே இறைவன் திருக்கோயில்.

"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும்"
(திருக்கோ.)

     வடவர் திரிபு வடிவை இயல்பு வடிவாகக் கொண்டு அறிவுவெளி
(ஞானாகாசம்) என்று பொருள் புணர்க்க முயல்வர். அம்பலம் (மன்றம்)
வேறு; அம்பரம் (வானம்) வேறு. மேலும் சித், அம்ர என்னும் இரு
வடசொற்களும் தென்சொற்றிரிபே என்பதை அறிக. இவை முன்னரே
காட்டப்பெற்றன.

சிதை - சித் (chid) - இ.வே.

     சிதைத்தல் = பிரித்தல், குலைத்தல், பிய்த்தல், கெடுத்தல், வெட்டுதல்,
அழித்தல்.

     சிதர்த்தல் = பிரித்தல், குலைத்தல், வெட்டுதல்.

சிந்து - ஸிந்து (dh) - இ.வே.

     சிந்துதல் = துளி சிதறுதல், நீர் தெளித்தல், நீர் ஒழுகுதல்.

     சிந்து =1. நீர். (பிங்.). 2. ஆறு (பிங்.). 3. கடல்.

"தேர்மிசைச் சென்றதோர் சிந்து"
(கம்பரா. ஆற்றுப். 32)

     ஆரியர் வருமுன்பே தமிழரும் திரவிடரும் பனிமலைவரை
பரவியிருந்ததால், சிந்தாற்றைத் தமிழர் முன்னரே அறிந்திருத்தல் வேண்டும்.

     வடவர் ஸித் (dh) என்னுஞ் சொல்லை மூலமாக ஐயுற்றுக் கூறுவர்.

     ஸித் = செல்.

சிந்தூரம் - ஸிந்தூர

     செந்தூள் = செம்பொடி, செந்நீறு.

     செந்தூள்-செந்தூளம்-செந்தூரம் - சிந்தூரம் = 1. செந்நீறு.

     "செந்தூரத் தாது கொடுத்திலரேல்" (உபதேசகா.உருத்திரா. 67).

     2. செம்பொடி.

     "மதகரியைச் சிந்தூர மப்பியபோல்" (கம்பரா. மிதிலைக்.151).

     3. சிவப்பு (பிங்.). 4. செங்குடை (பிங்.). 5. செம்புள்ளியுள்ள
     யானைமுகம். 6. யானை (பிங்.). 7. செம்மலர் பூக்கும் வெட்சி
     மரம். 8. சேங்கொட்டை. 9. செவ்வீயம்.

     சிந்தூரம் - சிந்துரம் = 1. சிவப்பு. "சிந்துரச் சேவடியான்"
     (திருவாச. 18:5).

     2. செம்பொடி. "சிந்துர மிலங்கத்தன் திருநெற்றிமேல்" (திவ்.பெரியாழ்.
     3 : 4 : 6). 3. நெற்றிச் செம்பொட்டு.