பக்கம் எண் :

முன்னுரை43

     தலைமுறைக்கு முந்தியே இராமனிருந்ததையும், ஆரிய வருகைக்குப்
பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பஃறுளி நெடியோன் செய்தி
புறநானூற்றிற் (9), கூறப்பட்டிருப்பதையும் நோக்கும்போது, புறநானூற்று
வான்மீகி வடமொழி யிராமாயண வான்மீகிதானோ என ஐயுற
இடமுண்டாகின்றது.

     இன்றும், வடநாட்டுச் சமற்கிருதப் புலவரினும் தென் னாட்டுச்
சமற்கிருதப் புலவர் வல்லுநராயிருப்பது கவனிக்கத் தக்கது.

11. தொல்காப்பியமும் பாணினீயமும்

     தமிழிலக்கணத்தை வடமொழி வழித்தாகக் காட்டல் வேண்டி,
ஆரிய வெறியால் நடுநிலை திறம்பிய வரலாற்றாசிரியரும் பிராமணத் தமிழ்ப்
புலவரும் தொல்காப்பியத்தைப் பாணினீயத் திற்குப் பிற்பட்டதாகக் காட்டி
வருகின்றனர்.

     பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டென்று வரலாற்று
நூலாசிரியராலும் மொழியாராய்ச்சியாளராலும் வரையறுக்கப் பெற்றுள்ளது.
தொல்காப்பியம் பாணினீயத்திற்கு முந்தியதும் பாரதக் காலத்திற்கும் (கி.மு.
1000) கடைக்கழகத் தொடக்கத்திற்கும் (கி.மு. 5 ஆம் நூற்.)
இடைப்பட்டதுமாதலின், கி.மு. 7ஆம் நூற்றாண்டின தாகும். இதற்கு
ஏதுக்களாவன:

(1) தொல்காப்பியம் பாரதக்கால நான்மறை வகுப்பிற்குப்
பிற்பட்டமை.
   
(2) தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திற் பாணினீயத்திற்கு முந்திய
ஐந்திரமே குறிக்கப்பெற்றுள்ளமை.
   
(3) தொல்காப்பியம் கடைக்கழகத்திற்கு முந்திய நிலந்தரு திருவிற்
பாண்டியன் அவையத்து அரங்கேறியமையும், கடைக்கழகத்
தோற்றம் கி. மு. 5ஆம் நூற்றாண்டென்று இராமச்சந்திர
தீட்சிதரால் நிறுவப்பெற்றுள்ளமையும்.
   
(4) தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தில் வேற்றரசர் படை
யெடுப்பும் சிற்றரசர் தலையெடுப்பு மின்மையை, "வண்புகழ்
மூவர் தண்பொழில் வரைப்பு" (1336) என்னுந் தொடராற்
குறித்திருத்தல்.
   
(5) அற்றைத் தமிழக எல்லை வடவேங்கடமும் தென்குமரியும்
குணகடலும் குடமலையும் என அறியுமாறு, "நாற்பெய ரெல்லை"
(1336) எனத் தொல்காப்பியத்திற் குறிக்கப் பெற்றிருத்தல்.