பக்கம் எண் :

முன்னுரை45

     தொடக்கப் பதினால் நூற்பாக்களும் சிவபெருமான் இயக்கிய
உடுக்கையினின்று ஒலித்தவையென்றும், அதனால் அவை மகேசுவர
அல்லது சிவ சூத்திரங்கள் எனப்பெறு மென்றும், ஏமாற்றி வருகின்றனர்.

     வடமொழி தேவமொழியாதலால் அது எம்மொழி யினின்றும் கடன்
கொள்ளாதென்றும், அதிலுள்ளவை யெல்லாம் வடசொற்களே யென்றும்,
ஆங்கில ஆட்சி தோன்றிய பின்பும் கூறி வருவது துணிச்சலான ஏமாற்றே.

     சிவன் (சேயோன்), திருமால் (மாயோன்), வேந்தன் (இந்திரன்),
வாரணன் (வருணன்), காளி என்னும் தமிழ்த் தெய்வங்களை ஆரியத்
தெய்வங்களென்றும், வடமொழியிலுள்ள மொழிபெயர்ப்பு நூல்களையும்
தழீஇய நூல்களையுமெல்லாம் முதனூல்களென்றும், கூறுவது
மதத்துறையிலும் இலக்கியத் துறையிலும் நிகழ்ந்துவரும் ஆரிய
ஏமாற்றுகளாகும்.

     இனி, இறைவனே பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன்
என்னும் நால்மக்கள் வகுப்பைப் படைத்தான் என்றும், அவை அவன்
தலை மார்பு தொடை பாதத்தில் தோன்றியவை யென்றும், அதனாற்
பின் மூன்றும் முறையே தாழ்ந்தவை யென்றும், அவற்றுள் ஒவ்வொன்றும்
மேல் வகுப்புகட்கு அல்லது வகுப்பிற்குத் தொண்டு செய்வதே இறைவன்
நோக்கமென்றும், இதை இறைவனே வரைந்தான் என்றும் கண்ணன்
வடிவிற் சொன்னானென்றும், இருக்கு வேதத்திலும் பகவற்கீதையிலும்
எழுதி வைத்திருப்பது, மன்பதை முழுவதையும் தழுவுவதால், எல்லா
ஏமாற்றிற்கும் முடிமணிபோற் சிறந்ததாகும்.

3. மூவகை வடசொற்கள்

     இந்தியாவிற்குட்பட்ட வடமொழி நிலைகள் மூன்றாதலால், தமிழில்
வழங்கும் அல்லது குறிக்கப்படும் வடசொற்களும் மூவகைப் படும். அவை
வருமாறு :

(1) பிராகிருத வடசொல்
எ-டு : ஆதி, இந்திரன்.
   
(2) வேத வடசொல்
எ-டு : இயந்திரம், தருமம்.
   
(3) சமற்கிருத வடசொல்
எ-டு : சாமி (ஸ்வாமி), பங்கயம் (பங்கஜ).