பக்கம் எண் :

மொழியதிகாரம்101

     வகையினராகத் தமிழர் தொன்றுதொட்டு இருந்துவந்திருக் கின்றனர்.
வருந்தியுழைப்பதன் விளைவாக, கரியர் கை மிகக் கருப்பதும் பொன்னர்
கை சிவப்பதும் இயல்பு.

"கருங்கை வினைஞருங் கூடி"

(சிலப். 10 :125)
 
"செய்தகை சேவெறும்,செய்யாதகை நோவேறும்"
(பழமொழி)

     கை கருத்தல்பற்றிக் கரு என்னும் வினைச்சொல்லும் சிவத்தல்
பற்றிச்செய் என்னும் வினைச்சொல்லும், தோன்றியதாகத் தெரிகின்றது.
இவற்றிற்குப் பிறவினை வடிவம் வேண்டுவதில்லை.

     ஒ.நோ: வெளுத்தல் = வெள்ளையாதல் (த.வி.), துணியை
            வெள்ளையாக்குதல் (பி. வி.).

     கருமம்-கம்மம்-கம்.

     கம்மம் = முதற்றொழிலாகிய பயிர்த்தொழில்.

     கம்மவர்-கம்மவாரு = பயிர்த்தொழில் செய்யும் தெலுங்கர்.

     கம் = பல்வேறு கனிய (உலோக)த் தொழில்.

     "ஈமுங் கம்மும்" (தொல். 328).

     கம்மாளன் = பொற்கொல்லன், ஐங்கொல்லருள் ஒருவன்.

     கம்மியன் = கற்றச்சன் (சிற்பி).

     கரு+வி = கருவி. கரு+அணம் = கரணம் = செய்கை, திருமணச்
     சடங்கு, கருவி, அகக்கருவி.

     "கற்பெனப் படுவது கரணமொடு புணர" (தொல். 1088).

     இதிற் கரணம் என்பது திருமண வினையாகிய சடங்கைக் குறித்தது.

     வடவர் கரு என்னும் முதனிலையைக் க்ரு எனத் திரித்துள்ளனர்.
இங்ஙனம் சொன்முதல் உயிர்மெய்யில் உயிரை நீக்குவது ஆரிய மரபு.

     ஒ.நோ: பொறு-ப்ரு (ª£), திரு-ச்ரீ, வரி-வ்ரீஹி.
            கரை-E. cry, துருவு-E. through, புருவம்-E. brow.

     வடவர் கரணம் என்னும் சொல்லைக் காரண என நீட்டி,
அதற்கேற்பக் கார்ய என்னும் சொல்லையுந் திரித்துள்ளனர். காரணம்
என்னும் நீட்டம் தமிழுக்கேற்கும். ஆயின், கார்ய என்னும் திரிப்பு ஏற்காது.

     ஏற்கெனவே கரணம் என்பதினின்று கரணியம் என்னும் சொல்
திரிந்துள்ளது. அதற்கேற்பக் கருமம் என்பதினின்று கருமியம் (காரியம்)
என ஒரு சொல்லைத் திரித்துக்கொள்ளலாம்.