பக்கம் எண் :

இலக்கணவதிகாரம்145

     ஸ வா இமே பாலகா வா ஆம்ரம் க்ருஹ்ணந்து. = அவனாவது
இந்தப் பையன்களாவது மாம்பழத்தை எடுத்துக்கொள்ளட்டும்.

     சொற்றொடரின் மூவுறுப்பும் அடைமொழியொடும் வரும்.
அடைமொழி பொதுவாக அடைகொளிக்கு முன்நிற்கும்.

     எ-டு: ரூபவதி ஸ்த்ரீ = அழகான பெண்.

     அப்யகார்யஸதம் க்ருத்வா பர்த்தவ்யா = நூறு தீவினைகளைச்
செய்தும் காக்கப்படவேண்டும்.

     இரு, உண்டு என்னும் இணைப்புவினை யின்றிப் பெயரும்
பயனிலையாக வருவதுமுண்டு.

     எ-டு: ஸிம்ஹ: ச்வாபதராஜ: =அரிமா விலங்கரசு.

     ஏஷ மே நிச்சய: = இது என் தீர்மானம்.

     இனி. சொற்றொடரின் மூவுறுப்புகளும், ஏதேனும் ஒரு பயன்
நோக்கி, பொருள் மாறா வகையில் மேற்குறித்த முறை மாறியும் வரும்.

     மணீம் சோரயதி ஸ்தேந:= மணியைத் திருடுகிறான் திருடன். வடமொழியிலக்கணம் எழுத்து, சொல், சொற்றொடர் என்னும் மூன்றொடு
முடிகிறது. செய்யுளிலக்கணம் சந்தஸ் என்றும், அணியிலக்கணம் அலங்கார
சாஸ்திரம் என்றும் வேறு நூல்கள்போல் வெவ்வேறாகக் கூறப்படும்.

     தமிழில் வடமொழியிலில்லாப் பொருளிலக்கண முண்மை யாலும்,
பண்டை யிலக்கியமெல்லாம் செய்யுள்வடிவி லிருந்தமை யாலும், சொல்லையடுத்த மொழியுறுப்புப் பொருளென்று கொண்டு, அதனுள்ளேயே
செய்யுளையும் உடம்பின் இயற்கை யழகுபோற் செய்யுளி லமைந்திருக்கும்
அணியையும் அடக்கி விட்டனர், மெய்ப் பொருளியல் முற்றத் துறைபோய
மேதகு பண்டைத் தமிழ் நூலோர்.

     நன்னூல், சின்னூல் முதலிய தென்னூலும், எழுத்துஞ் சொல் லும்,
சொற்றொடருமே கூறுகின்றனவேயெனின், அவை வடநூன் முறை
தழுவிய பின்னூலென்றும், தொல்காப்பியம்போல் நிறைவான பிண்ட
நூலாகாது குறைவான துண்ட நூலேயென்றும் கூறிவிடுக்க.