பக்கம் எண் :

164வடமொழி வரலாறு

     பொருள் கூறும். இதற்கு மட் (math) என்பதை மூலமாகக் காட்டுவர்.
அது மூலமன்று என்பதை,"(prob. invented for the word below) என்று
மா. வி. அ. கூறுவதினின்று தெரிந்துகொள்க. வடவர் கூறும் மூலப்பொருள்
வருமாறு:

     தாது பாடம் - to dwell or to be intoxicated,

     வோபதேவர்-to grind.

     பிறர்-to go.

     மால் = கருப்பு. மால்-மார்-மாரி = கரிய முகில், மழை, கரிய காளி.
மரணத்தை உண்டாக்குபவள் மாரி என்பது ஒருசிறிது பொருந்தப்
பொய்த்தல்.

     வரிதல் = சுற்றிக் கட்டுதல். வரி = கட்டு, கட்டணம், அரசிறை.
பண்டைத் தமிழ்நாட்டில், உழவர் பொலி தூற்றிய களத்தில் ஆறிலொரு
பங்கைக் கோணிப்பைகளிற் கட்டி அரசனுக்குக் கடமையாக இறுத்ததினால்,
கட்டுதற் சொற்குக் கட்டணப் பொருள் தோன்றிற்று. இதைத்
தெய்வங்கட்குப் படைக்கும் படைப்பைக் குறிக்கும் பலி என்னும்
சொல்லொடு தொடர்பு படுத்துவது எத்துணை மடமையாகும்!

     வாய்-வாயி. வாயித்தல் = வாயாற் படித்தல். ஒ. நோ: கண்
     -கணி. கடைக்கணித்தல் = கடைக்கண்ணாற் பார்த்தல். மலை
     யாளத்தில் வாயித்தல் என்னும் வடிவம் வழங்குகின்றது.

     வாயி-வாசி. வாசித்தல் = வாயாற் படித்தல், புல்லாங்குழல் போன்ற
     துளைக்கருவி யியக்குதல். வாசி-வாசினை = குழல் வாசிப்பு.
     வாசி-வாசகம் = வாசிக்கும் அல்லது வாசித்தற்குரிய பகுதி,
     வாசகப் பொத்தகம் (Reader).

     வடமொழியில் வாசக என்னும் சொற்குப் பேசுதல், சொல்லுதல்,
ஒப்பித்தல், வெளியிடுதல் என்னும் பொருள்களே உள; வாசித்தல் (reading)
என்னும் பொருளில்லை. அதற்கு வாச் என்பது மூலம்; வச் என்பது
அடிமூலம். அதினின்று வசனம் என்னும் சொல் தோன்றும். வாச் என்பது
வாக் என்று திரிந்து வாக்ய என்னும் சொல்லைப் பிறப்பிக்கும்.

     வாசிப்பது வேறு; சொல்வது வேறு. வடசொல் வேறுவகையில்
தோன்றியிருத்தல் வேண்டும்; அல்லது தென்சொல்லினின்று ஒலியும்
பொருளும் திரிந்திருத்தல் வேண்டும்.

     இங்ஙனமே ஏனைச் சொற்களும். விரிவஞ்சி அவை இங்கு
விளக்கப்பட்டில.