பக்கம் எண் :

166வடமொழி வரலாறு

     மா. வி. அ., செய்பவனைக் குறிக்கும் கார என்னுஞ் சொல் லொடு
கார(ம்) என்னும் நெடிற் சாரியையைத் தொடர்புபடுத்தி யிருப்பது தவறாகும்.

     சாலி என்னும் ஈறு இகரவீறு பெற்ற சால் என்னுஞ் சொல்லே.
சாலுதல் நிறைதல். சாலி (இருபாற்பொது) = நிறைந்தவன், நிறைந்தவள்.
சாலினி (பெ. பா.). பேரா. K.A. நீலகண்ட சாத்திரியார் தாம் இயற்றிய
'தென்னிந்திய வரலாறு' (A Histroy of South India) என்னும்
பொத்தகத்தில், தமிழர் அறுவகை யினங்கலந்த கலவையினத்தா ரென்றும்,

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
(1091)

     என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள ஐயர் என்னுஞ் சொற்குப்
பிராமணர் என்று பொருள் கொண்டு. தமிழரின் இல்லற வாழ்க்கைக்குரிய
திருமணக் கரணம் பிராமணரால் வகுக்கப் பெற்றதென்றும், அவர்
வருகைக்குமுன் தமிழர் மனையறவொழுங் கின்றித் திரிந்தன ரென்றும்,
வரைந்துள்ளார்.

     பர். S.P சுப்பிரமணிய சாத்திரியார், தொல்காப்பிய எழுத்ததி காரப்
பிறப்பியல் நூற்பாக்கள் பாணினி சிட்சையிலும் பிராதிசாக்கியங்களிலுமுள்ள
நூற்பாக்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பென்றும், சொல்லதிகார
நூற்பாக்கள் சில யாஸ்கரின் நிருக்தத்தைப் பின்பற்றியவையென்றும்,
பொருளதிகார மெய்ப்பாட்டியலில் எண்சுவை பற்றிய நூற்பாக்கள் நாட்டிய
சாத்திர நூற்பாக்களின் மொழிபெயர்ப் பென்றும், களவியல் நூற்பாக்கள்
சில கௌதம தரும சாத்திரத்தை யொட்டியவை யென்றும், மாயோன்
வேந்தன் வருணன் என்பவை இருக்குவேதத் தெய்வங்களென்றும்,
மரபியலிற் சொல்லப்பட்டுள்ள உத்திகள் சில அருத்த சாத்திரத்தினின்று
மேற்கொண்டவை யென்றும், பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலுங்
கூறப்பட்டுள்ள பல செய்திகள் வடநூல்களைத் தழுவியவை யென்றும்,
பொரு ளிலக்கண மென்பது பாட்டியலே (Poetics) யென்றும், திருவள்ளுவர்
இரண்டன்மை (அத்துவைத)க் கொள்கையைத் தழுவியவரென்றும், தாம்
விரும்பியவாறெல்லாம் தமது 'An Enquiry into the Relationship of
Sanskrit and Tamil' என்னும் பொத்தகத்தில் எழுதியுள்ளார்.

     இனி, அவர் தம் 'வடமொழி நூல் வரலாறு' என்னும் பொத்தகத்தில்,
"நாட்ய சாஸ்த்ரம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாய் இருத்தல்
வேண்டும். அங்குக் கூறப்பட்ட செய்திகள் பல: வேதத்திலுள்ள
செய்திகளைச் சூத்திரர் அறியாமையான், சூத்திரர்க்கும் ஏனையோர்க்கும்
கண்ணிற்கும் காதிற்கும்