பக்கம் எண் :

விள்3 (பிளவுக் கருத்துவேர்)143

விள்ளோடன் தேங்காய் = சிரட்டையினின்று எளிதாகப் பெயருந் தேங்காய் (யாழ்ப்).
     விள் - விளம்பு. விளம்புதல் = 1. வாய்விட்டுச். சொல்லுதல் வெளிப்படக் கூறுதல். "உடையது விளம்பேல்" (ஆத்திசூடி.). 2. பலரறியச் சொல்லுதல். நேற்றுப் பெண்ணிற்குப் பரிசம் விளம்பினார்கள் (உ.வ.). 3.பொதுமக்கட்குத் தெரிவித்தல், பறைசாற்றுதல். 4. செய்தி பரப்புதல் (பிங்.) 5. சொல்லுதல். "உற்றது விளம்ப லுற்றேன்" (சீவக. 1694).
     விளம்பு = சொல்.
     ம. விளம்புக.
     விளம்பு - விளம்பரம் = எல்லார்க்கும் அறிவிக்கை, பறைசாற்றுகை.
     ம. விளம்பரம்.
விளம்பு - விளம்பி = 1. கள், 2. அறிவிப்போன் (announcer) சொல்விளம்பி = கள் (குழூஉக்குறி).
     விள் - விழி. விழித்தல் = 1. கண் திறத்தல். "இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால்" (கலித்.144). 2. உறக்கந் தெளிதல். "உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (குறள். 339). 3. நோக்குதல். "விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின்" (குறள்.775). 4. தூங்காதிருத்தல். காவற்காரர் இராமுழுதும் விழித்திருப்பார்கள். (உ.வ.). 5. கவனித்துப் பார்த்தல். "நாட்டார்கள் விழித்திருப்ப.....நாயினுக்குத் தவிசிட்டு" (திருவாச. 5:28). 6. மருண்டு பார்த்தல். கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் விழிக்கிறான் (உ.வ.).
     விழிப்ப = (நி.கா.வி.எ.) பார்த்தமட்டில், தெளிவாக. "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (தொல். உரி. 16).
     விழிப்பு = 1. கருமத்திற் கவனம், எச்சரிக்கை. எதிரிகள் வலைக்குட் சிக்காமல் எப்போதும் விழிப்பாயிரு (உ.வ.). 2. அறிவுக்கண் திறப்பு. சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கத்தாலும். மறைமலையடிகள் தனித்தமிழ்த் தொண்டாலும், தமிழ்நாட்டிற் பெருவிழிப்பு ஏற்பட்டுள்ளது (உ.வ.).
     விழித்துக்கொள்ளுதல் = துயிலுணர்தல், அறிவுக்கண் திறக்கப்பெறுதல்.
     விழி = 1. கண் (பிங்.) "விழியிலா நகுதலை" (தேவா. 345 : 5). 2. கண்ணுருண்டை. 3. கண்பகுதி, வெள்விழி, கருவிழி. 4. ஓதி (ஞானம்). "தேறார் விழியிலா மாந்தர்" (திருமந். 177).
     ஒ.நோ: விழி - L. vide - vise (to see), Skt. vid (to know.)
     ஒ.நோ: நாழி - நாடி, ஒடி - ஒசி.
     வ. வித் - வேத = அறிவு, அறிவுநூல், ஆரியமறை.