| முன் மாதிரி இந்தியாவுக்குப் பொருத்தமானதன்று என்ற எண்ணம் ஏற்பட்டது. விடுதலை இயக்கத்தை ஏளனம் செய்து வந்த பிரிட்டிஷ் அரசியலறிஞர் இந்தியா ஒரு நாடன்று; நாடுகள் பலகொண்ட ஒரு கண்டமே எனக்கூறி நையாண்டி செய்ததுண்டு. அந்நாளில் நாட்டுரிமைக் கட்சித் தலைவராய் விளங்கிய அயர்லாந்துப் பெருமாட்டி, திருவாட்டி, அன்னிபெசன்ட் அம்மையார் `இந்தியா ஒரு நாடே’ என்று ஒரு நூலெழுதி விடையிறுத்தனர். ஆயினும் உள்ளுற இந்தியாவின் பல்வகைப் பெருக்கம் பலரை உறுத்திற்று. ஆகவே பிரிட்டனின் தனியாட்சி முறை நல்ல முன் மாதிரி அன்றெனினும், அமெரிக்காவின் கூட்டுறவு ஆட்சி போதிய அளவு முன்மாதிரியாகும் என்ற கருத்து எழுந்தது. இனம், சமயம் முதலியவற்றினும் மொழியே தலைமையான வேறுபாட்டு அறிகுறியாதலால் மொழிவாரியாகப் பிரிவினை செய்ய வேண்டும் என்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவாட்சி ஏற்படவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இங்கும் ஒரு சிக்கல் எழுந்தது. அமெரிக்கா இனம் பண்பியல், சமயப்பிரிவு ஆகிய வகைகளில் மாறுபாடுகள் உடையதாயினும் சமய ஒற்றுமையும் அதனினும் சிறப்பாக மொழி ஒற்றுமையையும் உடையது என்பது எடுத்துக் காட்டப்பட்டது. இவ்வேறுபாட்டை அகற்றும் முயற்சியாகவே பொதுமொழி வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. வடநாட்டில் இயற்கையாகவே முகலாயர் ஆட்சியில் உருது மொழி பொது மொழியாய் இயங்கியிருந்தது. அதனை வடநாட்டிலேனும் பொது மொழியாய் ஏற்கத்தடை, யெதுவுமில்லை. ஆனால் பெரும்பான்மை ஆரிய இந்து ஆய்வு பெற்ற நாட்டுரிமைக் |