பக்கம் எண் :

பூகம்பம்

இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லாப் பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி. சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி. அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது ப்ரஸவம் நெருங்கிய சமயம்.

இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்குப் பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலா மென்ற நம்பிக்கையும் அவரைப் விட்டுப் பிரிந்து நெடுங் காலமாய் விட்டது. அவருக்குச் சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மேற்படி மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலை மயிரெல்லாம் அன்னத் தூவி போல் நரைத்துக் கூனிக் குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேக நோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப் படைகளுடையவராய் விளங்கினார்.

இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்து இரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நக்ஷத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தார் எல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத்தொடங்கின. இரண்டு க்ஷணத்துக்கு ஒருமுறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.