அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப் பெண்ணே அக் குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதிவந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன சமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். இதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். "காதலாவது, உருளைக் கிழங்காவது! அய்யங்கார் சுவாமிகளே. பணிப் பெண்ணாவது, கதையாவது! நடக்கக் கூடிய விஷயமா? பணிப் பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?" என்று பந்துலு கேட்டார். இது கேட்டு கோபாலய்யங்கார் - "அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளை யழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கே யிருக்கிறது?" என்றார். அப்போது பந்துலு - "தங்களைப் போன்ற ஸ்தானமும் மதிப்புமுடைய மனிதரை அந்தப் பெண் மணம் செய்து கொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்ட மாத்திரத்தில் இணங்கி விடுவார்கள். இதிலெல்லாம் அதிகக் கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பணிப் பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களைப் புத்தி சுவாதீனமற்றவரென்று நினைப்பார்கள் தங்களுக்கு மதிப்பு குறைந்து போய்விடும்" என்றார். "சர்க்கார் வேலை போகாதே! அதற்கு யாதொரு ஹானியும் வராது, இங்கிலீஷ் ராஜ்யம்! தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை! எந்த ஜாதியார் எந்த ஜாதிப் பெண்ணை மணம் புரிந்து கொண்டபோதிலும், இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது" என்று கோபாலய்யங்கார் சொன்னார். |