இந்த மாதிரியாக நான் ஒரு கதை வாசித்திருக்கிறேன், நோய்க்கு முக்கியமான காரணம் ஜீவர்களின் மனதில் தோன்றும் பயம், கவலை, கோபம், சம்சயம், பொறாமை, வெறுப்பு, அதிருப்தி முதலிய விஷ குணங்களேயாமென்பது இந்தக் கதையின் பொருள். இதை நான் அங்கீகரிக்கிறேன். உள்ளத்திலே தோன்றும் அச்சம் முதலியனவே நோய்களைப் பிறப்பிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அங்ஙனம் பிறக்கும் நோய்களை நன்கு போஷணை செய்து வளர்ப்பதும், அதினின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கித் தருவதுமாகிய தொழில்கள் பெருமாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி முற்றிலும் உண்மை யெனவே நான் நினைக்கிறேன். இதினின்றும் வைத்திய சாஸ்திரம் பொய்யென்றாவது, வைத்தியர்களெல்லாருமே தமது சாஸ்திரத்தை நன்கு கற்றுணராத போலி வேஷதாரிகளென்றாவது, மனமறிந்த அயோக்கியர்களென்றாவது, வேண்டுமென்று மனிதனைக் கொல்லுகிறார்களென்றாவது நான் சொல்ல விரும்புவதாக யாரும் நினைத்துவிடலாகாது. வைத்திய சாஸ்திரத்தில் எத்தனையோ கண்கண்ட பயன்களிருப்பதை நான் அறிவேன். வைத்தியர்களிலே பலர் தமது சாஸ்திரத்தில் உண்மையான உயர்ந்த தேர்ச்சியுடையோராகவும் ஜீவகாருண்யத்தில் சிறந்த மகான்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும், வியாதிகள் பல்குவதற்கும், மரணம் இங்ஙனம் மனிதரைப் பூச்சிகளிலுங் கடையாக வாரிக்கொண்டு போவதற்கும் உலகத்து வைத்தியர்கள் பெரும்பாலும் ஹேதுவாகிறார்களென்ற என் கொள்கை தவறானதன்று. ஒன்றுக்கொன்று விரோதமாகத் தோன்றும் இவ்விரண்டு கொள்கைகளும் எங்ஙனம் ஏககாலத்தில் உண்மையாகு மென்பதைத் தெரிவிக்கிறேன். |