எனது பசியின் கொடுமையினால் அந்த ஆகாரத்தைத் தின்றுவிடலாமென்று யோசித்தேன். பிறகு சிந்தனை பண்ணிப் பார்த்தேன். 'போன ஜன்மத்தில் என்ன பாவம் பண்ணியோ இந்த ஜன்மத்தில் இந்தத் தீவில் வரவும், இத்தனைக் கஷ்டப்படவும் ஏது வுண்டாயிற்று. இப்போது பசித் துன்பத்தைப் பெரிதாக எண்ணி எந்த மகானோ ஸ்வாமி பூஜைக்காக வைத்திருக்கும் திருவமுதை அபகரித்தால், இன்னும் பாவ மேற்படும். ஆதலால் அந்தக் காரியம் செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன். பசி தாங்கவில்லை. நாமே பூஜை நைவேத்தியம் முடித்து விட்டுப் பிறகு அந்த உணவைக் கொள்ளலாமென்று நினைத்து ஸ்நானம் செய்து இடம் கிடைக்குமா என்று பார்க்கும் பொருட்டு வெளியே வந்து சிறிது தூரம் சுற்றிப் பார்த்ததில் அங்கே ஒரு சுனை யிருந்தது. அதில் ஸ்நானம் செய்து ஸந்தி முதலிய கர்மங்களை முடித்து விட்டு மறுபடி குடிசைக்குள்ளே போய்ப் பார்க்கையில் பிள்ளையார் மாத்திரந்தானிருந்தது. சோறு வடை தண்ணீர் பூ சந்தணம் ஒன்றையும் காணவில்லை. எனக்கு வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. "பிள்ளையாரே, பிள்ளையாரே, உனக்கு எங்கள் வேதபுரி சேர்ந்தவுடனே முப்பத்து மூன்று தேங்காய் உடைத்துப் பூஜை செய்கிறேன். எனக்கிந்த ஆபத்து நேரத்தில் உதவி செய்ய மாட்டாயா?" என்று வேண்டி வருத்தப்பட்டேன். இந்த நிலையில் எனது கனவு தடைப்பட்டது. பல குழப்பங்களுண்டாயின. செய்தி நினைப்பில்லை. பிறகு மறுபடியும் நான் கடலைகளின்மீது மிதந்து செல்வது கண்டேன். யுகப்பிரளயம் போலே யிருந்தது. என் கைகள் புடைத்தன. கண் தெரியவில்லை. பிரக்கினை சரியில்லை. கடலைத் திவலை திவலையாக உடைத்து நாசம் செய்து விடவேண்டு மென்ற நோக்கத்துடன் வாயு புடைப்பது போலிருந்தது; அதே சமயத்தில் எனதுடம்பைக் கடலலைகள் பந்தாடினது. என்னுயிரைக் கால தூதர் பந்தாடுவதுபோல் தோன்றிற்று. அப்போது மீண்டும் குல சக்தியின் பெயரை ஸ்மரித்து, |