"என்ன கந்தா, சௌக்கியந்தானா? ஒருவேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்துட்டேனோ என்னவோ? போய் மற்றொரு முறை வரலாமா?" என்று கேட்டேன். அதற்குக் கந்தன்: "அடபோடா, வைதிக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?" என்றது. "சரி, சரி, என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்" என்றது வள்ளியம்மை. அதற்குக் கந்தன் கட கடவென்று சிரித்து, கை தட்டிக் குதித்து நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது. வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்குச் சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே? இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கு மிகவும் திருப்தி தான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ? வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது. சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது. மறுபடியும் கூச்சல்; மறும்படியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து கொண்டே வந்தது. |