பக்கம் எண் :

முதற் பகுதி - சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை

பிதா சொல்லுகிறார்:-

பொதிய மலைக் காட்டிலே, ரஸிக சிரோமணி என்றொரு கழுதையிருந்தது. அது புல்லாந் தரைகளிலே மேய்ந்து நன்றாகக் கொழுப்படைந்து வருகையில் வசந்த காலத்தில், ஒருநாள் மாலை, ஒரு மாமரத்தின் பக்கமாகப் போகும் போது, கிளையின்மேல் மதுகண்டிகை என்றதோர் குயில் பாடிக் கொண்டிருந்தது. அதை ரஸிக சிரோமணி சிறிது நேரம் நின்று கேட்டது. குயிலின் பாட்டு மனோகரமாக இருந்தது. அந்தப் பாட்டிலே கழுதை மயங்கிப்போய் மதுகண்டிகையை நோக்கிச் சொல்லுகிறது: - "பெண்ணே, உன்பாட்டு எனக்குப் பரவச முண்டாக்குகிறது. ஆகா! சங்கீதத்தின் இன்பமே இன்பம்! உனது குரல் சன்னமானது. நமக்குக் கனத்த சாரீரம். உனக்குள்ள பயிற்சியும் திறமையும் நமக்கிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காட்டிலுள்ள மிருகங்களெல்லாம் கேட்டு வியப்படையும். சிங்க ராஜா நம்மை சமஸ்தானத்து வித்வானாக நியமனம் செய்வார். "இந்தக் காட்டிலுள்ள புல்லாந்தரைகளிலே ரஸிக சிரோமணி ஒருவன்தான் மேயலாம். மற்ற எந்த மிருகமும் மேயக் கூடாது? என்று கட்டளை பிறப்பித்துவிடுவார். பிறகு நமக்கு யாதொரு வேலையு மேற்படாது. நமது நிலைமை மிகவும் கொண்டாட்டமாய் விடும்.? இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன்:- "கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வரமாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனிலை" என்றது.