இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன்:- "கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வரமாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனிலை" என்றது. கழுதைக்குக் கோபமுண்டாய்விட்டது. கழுதை சொல்லுகிறது:- "செல்வமும், அழகும், கல்வியும், வலிமையும் ஜந்துக்களுக்கு அதிக கர்வத்தை உண்டாக்குகின்றன. தன்னைக் காட்டிலும் இந்த நிமிஷம் ஒரு விஷயத்திலே தணிந்திருப்பவன் எப்போதும் தணிவாகவே யிருப்பானென்று மூடன் நினைக்கிறான். எந்தத் தொழிலும் யாருக்கும் வரும். வருந்தினால் வாராத தொன்றுமில்லை. பார்ப்பாரப் பிள்ளைக்கு வியாபாரத் தொழில் வாராதென்று சொல்லி நகைத்த செட்டி அவமானமடைந்த கதை உனக்குத் தெரியாதோ?" "அதென்ன கதை?" என்று மதுகண்டிகை கேட்டது. |