அனைத்தையும் ஆழ்ந்து நிற்கும் அநந்த நிலையே, வருக வருணா, எல்லையற்ற நினதாண்மை, இந்த எமதறிவாகிய யாகஸ்தலத்திலே நிறுத்தி, எமது கட்டுகளை எல்லாம் வெட்டிவிடு வலிமையே, நினது வரவு நல்வரவு. உன்னை மிகவும் வேண்டுகிறோம். அர்யமந், எமக்கு வலிமை தருதல் வேண்டும். இன்பமே வா, வா, வா. பகதேவா, எப்போதும் எம்மோடு கூடி வாழ்ந்திரு. உனது முகம் மிகவும் அழகுடையது. அதைப் பார்த்துக்கொண்டே யிருந்தால் போதும் எமதுள்ளம் நிறைந்திருக்கும். உனது உதயதேவி முன்னமே வந்து விட்டாள். இளையவள், "செந்நிறமுடையவள், என்றும் விழிப்பவள், இவளைத் தீ கொணர்ந்து கொடுத்தான். தீ எம்மிடத்தே வளர்கிறான். தீ வலியவன். அவன் உண்மையையுடைய கடவுள். உள்ளத்தை அவனுக்கு விறகாகக் கொடுத்தோம். அதில் என்றும் எரிவான்; அவிந்து போகமாட்டான். நீ எமது தலைவன். அவனை முப்போதும் சரண மடைகின்றோம். இன்று இப்போது தேவர்களை அழைக்கிறோம். வா, சூர்யா, தெய்வ ஒளியே, ஞானச் சுடரே. அமிர்த ஊற்றே, வலிமையின் தந்தையே, வானவர் வழியே, அநந்தவிரிவே, ஆக்கமே, புகழே, வெற்றியே, எமதரசே, நின் வரவு நன்று, மிகவும் நன்று. மருத்துக்களே, புயற் காற்றுக்களே, மனதின் அசைவுகளே, மதிகளே, ஒளிமிகுந்தீர், வலிமையுடையீர், வானத்தையும் மண்ணையும், வலிமைக் களியிலே, குமுறும்படி செய்வீர் மேகங்களைப் புடைத்து நல்ல மின்னல் காட்டுவீர். மருத்துக்களே, வாரீர். மனதிலே நேரும் சோர்வுகளை யெல்லாம் உங்கள் வீரத்தினாலே தீர்த்து விடுக. நீங்கள் வாயுமண்டலத்தைப் புனிதப்படுத்துகிறீர்கள் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கிறீர்கள். வருக. இன்று தேவர்களை அழைக்கின்றோம். காற்றே வா. இங்கேயே இரு எப்போதும்; திரும்பியே போகாதே. நீ உயிர், உன்னை வரிக்கின்றோம். அசுவினிதேவர் உயிர்ப் பரிகளிலே ஏறி வருகின்றனர். அவர் நோய்களைத் தீர்ப்போர். அவரை எம்முள்ளே பதியும்படி செய்கின்றோம். |