பக்கம் எண் :

கலைகள் - மலையாளத்துக் கதை

மலையாளத்துக் கதை போகப்போக ரஸப்படுகிறது. ராகவசாஸ்திரி மலையாளத்தைப் புகழுகிற புகழ்ச்சியைக் கேட்டால் யாருக்கும் அந் நாட்டிலே போய் சில மாதங்கள் கழித்து வரவேண்டுமென்ற இச்சை யுண்டாகும்.

நம்பூரிப் பிராமணர்களும், பலாப்பழமும், மாம்பழமும், வாழைப்பழமும், இனிய ரூபங்களும் மலிந்து கிடக்கும் அந்த நாட்டை நினைக்கும்பொழுது எனக்குப் பெரிய விருப்பமுண்டாகிறது. இயற்கைத் தெய்வம் அங்கே அழகு முழுவதையும் சிந்தியிருப்பதாக ராகவசாஸ்திரி சொல்லுகிறார். "மலையாள மென்பது ஸௌந்தரியத்தின் பெயர் என்று குழந்தைப் பருவம் முதலாகவே என்மனதிற்பட்டிருந்தது. நான் மலையாளத்திற்குப் போனதே கிடையாது. சும்மா வடக்கம் மலையாளத்தைப் பற்றியும் தெற்கம் மலையாளத்தைப் பற்றியும் கதை கேட்டிருக்கிறேன். மலையாள பகவதிக்கும் சாஸ்தாவுக்கும் அந்த நாட்டில் நடக்கும் மகிமையைக் கேட்டுப் பலமுறை ஆச்சர்யப்பட்ட துண்டு. மலையாளத்து மந்திரவாதிகளின் கதைகளைக் கேட்டு நகைத்ததுண்டு. மலையாளம் சக்தி நாடென்றும் அங்கே பெண்களுக்குப்படிப்பும் அறிவும் மிகுதியென்றும் அதனாலேதான் அந்த நாட்டிற்குப் பெண் மலையாளம் என்னும் பெயருண்டாயிற்று என்றும் கேள்விப்பட்டேன். அங்கே புலயரைத் தீயரும், தீயரை நாயரும், நாயரை நம்பூரியும் மிகவும் இழிவாக நினைக்கிறார்களென்பது மூன்றுலோகப் பிரஸித்தம். இந்த ராகவசாஸ்திரி வந்ததிலிருந்து எனக்கு அந்த நாட்டிலே ஜாதிப்பகைமை ஏற்படுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகத் தெரிவதுடன் இங்கிலீஷ் படித்த தீயர்,நாயர், இரு பகுதிகளிலும் ஒரு பகுதியார் மேற்படி பகையை நெருப்புக்கு நெய்விட்டு வளர்க்கக்கூடிய நிலைமையிலே இருக்கிறார்களென்பதையும் காண்கிறேன்.

"தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக" என்று சாஸ்திரி சொன்னார்.

"மலையாளத்துக் கதை மேலே நடத்தும்" என்றேன். ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:-

"நம்பூரி இல்லத்தில் (வீட்டில்) வெளித்தோட்டமிருக்கும் வேலிக்குள் யாரும் நுழையக்கூடாது. நம்பூரிப் பெண்கள் ஜமுனா (அந்தபுரம்) தோட்டத்திலே குளப்புரை அந்தப் பெண்களில் பலருக்கு விவாஹமே கிடையாது சாவு மட்டும். புருஷரில்லாமல் வாழ்ந்து, செத்த பிறகு பிணத்துக்கு மணச்சடங்கு செய்வதுமுண்டு. நம்பூரிகளில் மூத்த பிள்ளைக்கு சொத்து எல்லாம். மூத்த பிள்ளை ஒருவன் மாத்திரமே விவாஹஞ் செய்யலாம். மற்ற இளைய பிள்ளைகள் நாயர்ஸ்திரீகளுடன் ஸம்பந்தஞ் செய்து கொள்ளுவார்கள். ஒரு நம்பூரி பல பெண்கள் மணந்து கொள்ளுவான். அப்படி யிருந்தும் அவர்களில் பெண் தொகை மிச்சப்பட்டு பலர் மணமறியாமல், வெளியிலறியாமல், காற்றறியாமல் வாழ்ந்து குளப்புரையருகே தோட்டத்தில் புதைக்கப்படுகின்றனர்.