பக்கம் எண் :

கலைகள் - போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராயர்

சென்னைப் பட்டணத்திலிருந்து பம்பாய்க்குப் போகும் (மதறாஸ் தென் மராட்டிய) ரெயில் பாதையில் 'வொண்டி மிட்ட' என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலுள்ள 'வொண்டிமிட்ட' என்னும் ஊர் மிகவும் அழகுடையது. 'வொண்டிமிட்ட' என்றால் 'ஒற்றைமலை' என்று அர்த்தம். ஒற்றைக் குன்று; அதனடியிலே பெரிய ஏரி. மேலே இராமலிங்கேசர் ஆலயம். தெலுங்குப் பாஷையில் மிகச் சிறந்த காவியமாக ஸ்ரீ பாகவதத்தை எழுதிய 'போத்தன்னா' என்ற மகாகவி அந்த ஊரிலே பிறந்தவர். இவருடைய பாகவதம் நம்முடைய இராமாயணத்தைப்போல "ஸம்ஸ்கிருத நூலைத் தழுவி எழுதப்பட்ட வழிநூல் ஆயினும்படிப்பவருக்கு முதனூலத்தனை பெருமை தோன்றும்படி அமைந்திருக்கிறது. நாம் கம்ப ராமாயணத்தைக் கொண்டாடுவது போலவே, தெலுங்கர் 'போத்தன்னா' வின் பாகவதத்தைக் கொண்டாடுகிறார்கள். சில தினங்களின் முன்பு 'ஹிந்து'ப் பத்திரிகையில் மேற்படி 'போத்தன்னா'வைப் பற்றி கும்பகோணம் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருக்கும் ஸ்ரீ வெங்கடேசய்யர் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 'போத்தன்னாவின் ஜன்ம நக்ஷத்திரத்தைக் கண்டுபிடித்து அதனை 'வொண்டிமிட்டா'வில் வருஷந் தோறும் கொண்டாட வேண்டுமென்றும் அதற்குத் தெலுங்கு தேசத்திலும் வெளிப் பக்கங்களிலுமுள்ள ஆந்திர பாஷாபிமானிகள் எல்லோரும் வந்து கூடவேண்டுமென்றும் ஸ்ரீ வெங்கடேசய்யர் சொல்லுகிறார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரம் நிச்சயமாகத் தெரியாத பக்ஷத்தில், ஸ்ரீீகிருஷ்ண ஜயந்தி யன்று அவர் ஞாபகத்தைக் கொண்டாடலாமென்கிறார். இது சரியான வார்த்தை.

கம்பர், திருவள்ளுவர், இளங்கோ

ஆனால், தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்?