பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்ப மென்று கருதியா? சரத்காலம் நம் நாட்டில் ஒன்று போல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லை யாயினும், ஓரிடத்திலே தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவியிருக்கலாம். 'மஹாளய அமாவாஸ்யை' என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத்தப்பிய புதிய உயிர் கொண்டவுடன், சேர்ந்தபடியாகப் பல நாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். "கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரி பூஜைக்குப் புராணப்படி முகாந்தரம் சொல்லப்பட்டிருக்கிறது. நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை) லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும் அது முதல் வருஷந்தோறும் நமது தேசத்தில் இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம். பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:- அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று. அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது. எப்படிப் பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும், எப்படிப் பார்த்தாலும் முடிவில்லாமலும் இருக்கும் அற்புத வஸ்து. கோடானகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது. ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள் இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது; பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள்; பராசக்தி. இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை; சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும். "கேட்டது பெறுவாய்" என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற கிருஸ்து சித்தர் சொல்லுகிறார். |