பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி

இப்படியிருக்க, என் தேசத்துக் கைக்கோளர்கள்செய்த துணிகளை நான் எனது நாட்டிலே பரவச் செய்வேன்என்றால், இது ராஜாங்கத்தாருக்குப் பெரிய விரோதமாகவாபோய்விடும்?  எனது குழந்தைகள் எனது மூதாதைகளைப்பற்றியும் எனது தேச சரித்திரத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியாமல், நான் நம்பும் வேதங்கள், சாஸ்திரங்கள்முதலியவற்றின் பெருமையை அறியாமல், ஜீவனத்திற்கு வேண்டிய கைத்தொழில்களைப் பற்றி ஏதுமே கற்றுக்கொள்ளாமல், மனிதர்களைப் ?போனகிராப்? பெட்டிகளாகச் செய்யும் நாசகரமான கல்வி கற்கும்படி செய்து அவர்களைக் கெடுக்கமாட்டேன். ஜாதீயப் பாடசாலைகளுக்கு அனுப்பி ஐரோப்பியக் கல்வியிலே பிரயோஜனகரமான அம்சத்தை மட்டும் கற்றுக்கொள்ளும்படி செய்து எனது தேசத்து ஞானமும் என் குழந்தைகளுக்கு ஏற்படும் படி செய்வேன். இதில் சட்டத்திற்கு என்ன கஷ்டம் "சம்பவித்து விட்டது?

இனிப் பணச்செலவு மிகுதியாவதை உத்தேசித்து எங்கள் வியாஜ்ஜியங்களைப் பஞ்சாயத்துக்கள் மூலமாகத் தீர்த்துக் கொண்டால் எந்தச் சட்டத்திற்கு விரோதம்?

எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும், சௌகரியமும், தீர்க்காயுளும் இந்தத் தலை முறையிலே ஏன் இல்லை?  நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து துர்பலமடைந்து, க்ஷீணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்?  இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன்.

நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் "முறிந்து போகிறது?  இங்கிலீஷ் பாடசாலைகளிலேகூட நமது பிள்ளைகளுக்கு ஒருவிதமான சரீரப் பயிற்சி கொடுக்கவில்லையா?  இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் போய்ப் படிக்கத் தகுந்த சொத்தில்லாத பிள்ளைகள் எங்கள் தேசத்தில் கோடிக்கணக்காக இருக்கிறார்கள். அவர்களுடைய சரீரம் பலமடையக் கூடாதென்று எங்கேனும் சாஸ்திரமேனும், சட்டமேனும் உண்டா?  அதற்குரிய முயற்சிகளை நான் செய்தால் அதினின்று சட்டத்திற்குத் தலைநோவு கண்டுவிடுமா?சீச்சீ! சுதேசியம் சட்ட விரோதம் என்று சொல்லுகிறவர்கள் பொய் சொல்லுகிறார்கள். அவர்கள் நம்மைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுகிறார்கள்.அவர்கள் பேச்சைக் கேட்டு மயங்குபவர்கள் தேசநலம் அறியாத களிமண்-அறிவு கொண்ட மூடர்கள்.

அந்நிய-வஸ்து-வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாயத்து, சரீரப் பயிற்சி - இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும்.

இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது இவற்றை ஆதரிக்காமலிருப்பவர்கள் தேசத்துரோகிகள் ஆவார்கள்.