பக்கம் எண் :

சமூகம் - பாடங்கள்

(அ) எழுத்து, படிப்பு, கணக்கு(ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்

வேதகால சரித்திரம், புராணகால சரித்திரங்கள், பௌத்த காலத்துச்சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்படவேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்றுவிக்கப்படவேண்டும். (இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று, பாஷைப்பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ் நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.)  இந்தச்சரித்திரங்களில் மஹா கீர்த்தி"பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும்உத்ஸாகத்துடனும்,ஆவேசத்துடனும், பக்தி சிரத்தைகளுடனும்கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால்,பள்ளிப்பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜூனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்திமேன்மைப்படுத்துவதற்கு நல்லஸாதனமாகும்.

தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப்"படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின்மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர்சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?  இது நிற்க.
        ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸௌகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ்,போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்கா, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது.